ஓசூர், ஜூலை 24: ஓசூர் மாநகராட்சிப் பகுதிகளில், நீண்ட நாட்களாக வாடகை செலுத்தாத 9 கடைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டது.ஓசூர் மாநகராட்சிக்கு சொந்தமான எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், மத்திகிரி வணிக வளாகக் கடைகள் மற்றும் மாநகராட்சி கட்டிடங்களில் இயங்கி வரும் கடைகளில், நீண்ட நாட்களாக வாடகை செலுத்தாமல் நிலுவை வைத்திருந்த கடைக்காரர்களுக்கு, மாநகராட்சி நிர்வாகம் சார்பில் ஏற்கனவே இறுதி எச்சரிக்கை அறிவிப்பு வழங்கப்பட்டது. ஆனாலும், அவர்கள் நிலுவை தொகை செலுத்தாமல் இருந்தனர்.
இந்நிலையில், நேற்று மாநகராட்சி அதிகாரிகள், ஓசூர் பேருந்து நிலையத்தில், நிலுவைத் தொகையை செலுத்தத் தவறிய 9 கடைகளை பூட்டி சீல் வைத்தனர். இது குறித்து மாநகராட்சி ஆணையாளர் சபீர் ஆலம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது: ஓசூர் மாநகராட்சி பகுதிகளில் உள்ள கடைகளின் நிலுவை வாடகையாக கடந்த 3.7.2026 முதல் இதுவரை ரூ.71.77 லட்சம் வசூல் செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், நிலுவையில் இருந்து சொத்து வரி ரூ.32 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சியின் உள்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சிப் பணிகளை தடையின்றி மேற்கொள்ள வரி வருவாய் மிகவும் அவசியம்.
