கிருஷ்ணகிரி, ஜூலை 24: கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அடுத்த எலசக்குட்டஅள்ளி பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி மாதம்மாள் (53). இவர் கடந்த சில நாட்களாக இடுப்பு வலியால் பாதிக்கப்பட்டிருந்தார். இதற்காக பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால், மனவேதனையில் இருந்த அவர், கடந்த 17ம் தேதி விஷம் குடித்து மயங்கினார். அவரை குடும்பத்தினர் மீட்டு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி, அவர் நேற்று முன்தினம் உயரிழந்தார். இதுபற்றி காவேரிப்பட்டணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
