பாடாலூர், ஜூலை 23: பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா பாடாலூர் கிழக்கு ஊராட்சிக்கு உட்பட்ட திருவளக்குறிச்சி கிராமத்தில் கல்குவாரி அமைப்பது தொடர்பாக கருத்துக் கேட்புக் கூட்டம் நேற்று நடந்தது. பாடாலூர் தனியார் அரங்கில் நடந்த இக்கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சொர்ணராஜ் தலைமை வகித்தார். கூட்டத்தில் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் விஜயப்ரியா, ஆலத்தூர் தாசில்தார் பாக்கியராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில், திருவளக்குறிச்சி, பாடாலூர் ஆகிய கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை முன் வைத்தனர். அதில் குறிப்பாக திருவளக்குறிச்சியில் கல்குவாரி அமைந்தால், உள்ளூர் மக்களுக்கு அதிக வேலை வாய்ப்பு வழங்க வேண்டும்.
