×

வினாத்தாள் கசிவுக்கு எதிராக மேலும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்: பிரதமர் மோடி உறுதி!

டெல்லி:நீட் தேர்வில் நடைபெற்ற முறைகேடுகளைக் கண்டித்து ‘CJP’ அமைப்பினர் போராட்டம் நடத்தி வரும் நிலையில், வினாத்தாள் கசிவுக்கு எதிராக “மேலும் கடுமையான நடவடிக்கைகள்” எடுக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார்.

இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் இரவு பகிர்ந்த ஒரு வீடியோ செய்தியில், குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்கிடவும், ‘விரைவு நீதிமன்றங்களை’ அமைக்கவும் வழிவகை செய்யும் சட்ட வரைவு மசோதாவை ஒன்றிய அமைச்சரவை நாளை(இன்று) பரிசீலிக்கும் என்று அறிவித்தார். “விரைவு நீதிமன்றங்களை அமைக்குமாறு சம்பந்தப்பட்ட துறைகளுக்கு நான் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளேன்” என்றும் அவர் தெரிவித்தார்.

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்றும், பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் இதுகுறித்து விரிவான விவாதம் நடத்தப்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இதனால் நாடாளுமன்றத்திற்குள்ளும் வெளியிலும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. வீடியோவுடன் பிரதமர் வெளியிட்ட பதிவில், “நாளை(இன்று) நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் வினாத்தாள் கசிவுக்கு எதிராக மேலும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன!” எனக் குறிப்பிட்டுள்ளார்.

வீடியோவில் பிரதமர் மோடி பேசியதாவது:”நண்பர்களே, வினாத்தாள் கசிவு என்பது ஒரு சாதாரண விஷயம் அல்ல என்பதை நான் அறிவேன். லட்சக்கணக்கான மாணவர்களுக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கும் இது மிகவும் வேதனையானது. இதனால்தான், கடந்த இரண்டரை மாதங்களில் வினாத்தாள் கசிவு சம்பவங்கள் நடந்ததில் இருந்து பல முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. குற்றவாளிகள் பிடிக்கப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மாணவர்களின் ஒரு முழு கல்வியாண்டு வீணாகிவிடக் கூடாது என்பதை உறுதி செய்வதே நமது மிக முக்கியமான பொறுப்பாக இருந்தது. உடனடியாகத் தேர்வுகளை நடத்துவது மிகவும் அவசியமாக இருந்தது. மிகக் குறைந்த காலத்தில் சுமார் 22 லட்சம் மாணவர்களுக்குத் தேர்வுகளை நடத்த அரசு தனது முழு பலத்தையும் பயன்படுத்தியது. கடந்த ஜூலை 19 அன்று தேர்வுகளின் முடிவுகளும் அறிவிக்கப்பட்டு, வெற்றி பெற்ற மாணவர்களின் மகிழ்ச்சியான செய்திகள் நாடு முழுவதிலுமிருந்து வந்து கொண்டிருக்கின்றன.”

இத்துடன் அரசு நின்றுவிடாது என்று சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி, மேலும் கூறியதாவது:”இருப்பினும், இத்துடன் திருப்தியடைந்து அமர்ந்துவிடும் நபர் நான் அல்ல. எனவேதான், விரைவு நீதிமன்றங்களை அமைக்கத் துறைகளுக்கு இன்றே உத்தரவிட்டுள்ளேன். அதிகாரிகள் இடைவிடாது பணியாற்றி, நேற்று நள்ளிரவில் ஒரு சட்ட வரைவை என்னிடம் வழங்கியுள்ளனர்.

விரைவு நீதிமன்றங்கள் மற்றும் கடுமையான தண்டனைகளுக்கான விதிகளைக் கொண்ட இந்த வரைவு, நாளை(இன்று) அமைச்சரவையில் விவாதிக்கப்படும். அமைச்சரவை சக தோழர்களின் ஆலோசனைகள் சேர்க்கப்பட்டு, இதற்கு இறுதி வடிவம் கொடுக்கப்படும். திங்கள்கிழமை நாடாளுமன்றத்தின் இரண்டாவது வாரக் கூட்டத்தொடர் தொடங்குவதால், இந்த மசோதாவை விரைவில் அவையில் நிறைவேற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

நமது இளைஞர்களின் நலன் மற்றும் எதிர்காலத்தை விட வேறு எதுவும் முக்கியமானது அல்ல! அவர்களின் எதிர்காலத்தைப் பாழாக்க முயல்பவர்கள் எவரும் தப்ப முடியாது. முன்னதாக, தேர்வு வினாத்தாள் கசிவில் ஈடுபட்டவர்களுக்கு உடனுக்குடன் தண்டனை வழங்குவதை உறுதிசெய்ய விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும்” என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Tags : PM ,MODI ,Delhi ,Narendra Modi ,CJP ,
× RELATED கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம்...