×

டெல்லியில் பதற்றம்: 17 முக்கிய மெட்ரோ நிலையங்கள் இன்று காலை 7.30 மணி முதல் அடைப்பு!

டெல்லி: டெல்லி ஜந்தர் மந்தரில் ‘காக்ரோச் ஜனதா கட்சி’ நடத்தி வரும் தொடர் போராட்டங்களை முன்னிட்டு, மத்திய டெல்லியில் உள்ள 17 முக்கிய மெட்ரோ ரயில் நிலையங்கள் இன்று காலை 7.30 மணி முதல் மறு உத்தரவு வரும் வரை மூடப்படுவதாக டெல்லி மெட்ரோ ரயில் கழகம் அறிவித்துள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காகத் தொடர்ச்சியாக 3-வது நாளாக இந்த நிலையங்கள் மூடப்படுவதால், தலைநகரில் இயல்பு வாழ்க்கை மற்றும் போக்குவரத்து வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையின் கீழ் ராஜீவ் சௌக், மத்திய செயலகம், மண்டி ஹவுஸ், படேல் சௌக், ஜன்பத், லோக் கல்யாண் மார்க், சேவை தீர்த், பாராகம்பா ரோடு, ராமகிருஷ்ணா ஆசிரமம் மார்க், உச்ச நீதிமன்றம், ஐ.டி.ஓ, டெல்லி கேட், இந்திரபிரஸ்தா, கான் மார்க்கெட், ஜோர் பாஹ், சிவாஜி ஸ்டேடியம் மற்றும் ஜண்டேவாலான் ஆகிய 17 மெட்ரோ நிலையங்கள் முழுமையாக அடைக்கப்பட்டுள்ளன. இருப்பினும், பயணிகளின் வசதிக்காக ராஜீவ் சௌக், மண்டி ஹவுஸ் மற்றும் மத்திய செயலகம் ஆகிய நிலையங்களில் ரயில்களை மாறும் வசதி மட்டும் தொடர்ந்து செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போராட்டம் காரணமாகக் கடந்த புதன் மற்றும் வியாழக்கிழமைகளிலும் இந்த நிலையங்கள் மூடப்பட்டிருந்த நிலையில், நேற்று சுமார் 14 மணி நேர மூடலுக்குப் பிறகே சில நிலையங்களின் நுழைவு வாயில்கள் திறக்கப்பட்டன. தொடர்ந்து மெட்ரோ நிலையங்கள் மூடப்பட்டு வருவதாலும், ஜந்தர் மந்தர் மற்றும் ஜன்பத் சுற்றியுள்ள சாலைகளில் போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாலும், அலுவலகங்களுக்குச் செல்வோர், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பேருந்துகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

Tags : Delhi ,Kakroch Janata Party ,Delhi Jantar Mander ,Central Delhi ,
× RELATED மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டம்...