×

காமன்வெல்த் விளையாட்டு போட்டி கிளாஸ்கோவில் கோலாகல தொடக்கம்: பதக்க வேட்கையில் இந்தியா

கிளாஸ்கோ: காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஸ்காட்லாந்து நாட்டின் கிளாஸ்கோ நகரில் வண்ணமயமான கலைநிகழ்ச்சிகளுடன் நேற்று கோலாகலமாகத் தொடங்கியது. ஆகஸ்ட் 2ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த 23வது காமன்வெல்த் போட்டியில் மொத்தம் 74 நாடுகள்/ பிராந்தியங்களை சேர்ந்த அணிகள் சார்பாக 3,000க்கு அதிகமான வீரர், வீராங்கனைகள் 10 வகையான விளையாட்டுகளின் 215 பிரிவுகளில் பதக்க வேட்டை நடத்த உள்ளனர்.

1934ல் காமன்வெல்த் போட்டியில் முதல் முறையாகக் கால் பதித்த இந்தியா, தற்போது 19வது முறையாக பதக்க வேட்டையில் இறங்கியுள்ளது. இங்கிலாந்தில் 2022ல் நடந்த போட்டியில் இந்தியா 61 பதக்கங்களை வென்று சாதனை படைத்த நிலையில், இம்முறை அதில் பாதி அளவு பதக்கங்களையாவது வெல்லுமா என்பதே கேள்விக்குறியாகி உள்ளது. 2026 தொடரை நடத்த இருந்த விக்டோரியா (ஆஸி.) நிதிப்பற்றாக்குறை காரணமாக விலகிக்கொள்ள, அதன் பிறகே கிஸாஸ்கோவுக்கு வாய்ப்பு கிடைத்தது.

இதனால் விளையாட்டுகளின் எண்ணிக்கை 19ல் இருந்து 10 ஆகக் குறைக்கப்பட்டதுடன், இந்தியா அதிக அளவில் பதக்கங்களைக் குவிக்கக்கூடிய பல விளையாட்டுகள் நீக்கப்பட்டன. மல்யுத்தம், பேட்மின்டன், டேபிள் டென்னிஸ், ஹாக்கி, கிரிக்கெட் ஆகிய விளையாட்டுகள் இல்லாதது இந்தியாவின் பதக்க வேட்டைக்கு பெரும் பின்னடைவை கொடுத்துள்ளது. இந்த விளையாட்டுகளில் மட்டுமே இந்தியா கடந்த முறை 28 பதக்கங்களை வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

மொத்தம் 125 பேர் அடங்கிய அணி கிளாஸ்கோ சென்றுள்ள நிலையில் தடகளம், பளுதூக்குதல், குத்துச்சண்டையில் பதக்க வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. ஜூடோ, லான் பவுல் போன்றவற்றிலும் சில பதக்கங்களை எதிர்பார்க்கலாம். ஈட்டி எறிதல் நட்சத்திரம் நீரஜ் சோப்ரா, நீளம் தாண்டுதலில் முரளி ஸ்ரீசங்கர், ஓட்டப் பந்தயங்களில் பாருல் சவுதாரி, குல்வீர் சிங் ஆகியோர் பதக்கங்களை வெல்வது உறுதி. பளுதூக்குதலில் மீராபாய் சானு, பிந்தியாராணி தேவி, அஜயா பாபு, கியானேஷ்வரி யாதவ், ஆகியோரும் நம்பிக்கை அளிக்கின்றனர்.

* முதல் பதக்கம் உறுதி
மகளிர் பாக்சிங்கில் இந்தியாவின் முதல் பதக்கம் நேற்று உறுதியானது. தொடக்க விழாவுக்கு முன்பாகவே! மகளிர் 75 கிலோ எடை பிரிவு குத்துச்சண்டை போட்டியில் இந்திய நட்சத்திரம் லவ்லினா போர்கோஹைன் களமிறங்காமலேயே அரையிறுதிக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்தார்.இந்த பிரிவில் மொத்தம் 5 வீராங்கனைகள் மட்டுமே போட்டியிடும் நிலையில், லவ்லினா உட்பட 3 பேர் நேரடியாக ’டைரக்ட் பை’ மூலம் அரையிறுதிக்கு முன்னேறினர்.

இதனால் குறைந்தபட்சம் வெண்கலப் பதக்கம் உறுதியாகி உள்ள நிலையில், அரையிறுதியில் டாபாகியுடன் ஜூலை 31ல் மோதவுள்ள லவ்லினா அதில் வென்றால், தங்கம் அல்லது வெள்ளி பெறலாம்.
முதல் நாளான நேற்று இந்தியா லான் பவுல் போட்டியில் களமிறங்கியது.

* விலகினார் ஜூடோ வீரர்
கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டிக்கு முன்பாக நடத்தப்பட்ட ஊக்கமருந்து சோதனையில், இந்திய ஜூடோ வீரர் அருண் குமார் (73 கிலோ பிரிவு) தடைசெய்யப்பட்ட அனபாலிக் ஸ்டீராய்டு மருந்தை உட்கொண்டது உறுதியானதை அடுத்து போட்டியில் இருந்து அவர் விலகிக்கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 27ல் கிளாஸ்கோ செல்லும் இந்திய ஜூடோ அணி 31ம் தேதி போட்டியில் பங்கேற்கிறது.

* மீராபாய் சானுவுக்கு முதல் மரியாதை
காமன்வெல்த் விளையாட்டு போட்டியின் தொடக்க விழா அணிவகுப்பில், பளுதூக்குதல் வீராங்கனை மீராபாய் சானு தேசியக் கொடி ஏந்தி தலைமை வகிக்க இந்திய குழுவினர் உற்சாக நடை போட்டனர். அணிவகுப்பில், இங்கிலாந்து மன்னரின் பாரம்பரிய செங்கோலை ஏந்திச் செல்லும் கவுரவம் குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா போர்கோஹைனுக்கு வழங்கப்பட்டது.

Tags : Commonwealth Games ,Glasgow ,India ,Glasgow, Scotland ,23rd Commonwealth Games ,
× RELATED ஜிம்பாப்வேயுடன் முதல் டி20 எளிதாக வென்றது இந்தியா