×

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் செயல்படுத்தப்படும்: காமராஜர் காலை உணவு திட்டத்திற்கு டெண்டர் கோரியது நகராட்சி நிர்வாக துறை

 

சென்னை: அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் செயல்படுத்தப்படும் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டத்திற்கு நகராட்சி நிர்வாக துறை டெண்டர் கோரியுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் பெயரை பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம் என்று தமிழக அரசு நேற்று பெயர் மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டத்தில் உணவு வழங்குபவர்களை தேர்வு செய்ய டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏழை மாணவர்களையும் பள்ளிக்கு அழைத்து வரும் வகையில், மதிய உணவு திட்டத்தை. முதலமைச்சராக இருந்த காமராஜர் கொண்டு வந்தார். அந்த திட்டம் மூலம் அதிகமான ஏழை மாணவர்கள் பள்ளிக்கு வரத் தொடங்கினர்.

எனவே அந்த திட்டம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. எம்ஜிஆர் முதலமைச்சராக இருந்தபோது 1982ம் ஆண்டு ஜூலையில், மத்திய உணவு திட்டத்தை மாற்றி அனைத்து மாணவர்களுக்குமான சத்துணவு திட்டமாக அதை கொண்டு வந்தார். இதைத்தொடர்ந்து தமிழக முதல்வராக கலைஞர் இருந்தபோது, சத்துணவோடு முட்டையையும் சேர்த்து வழங்க உத்தரவிட்டார். இதையடுத்து 2021ம் ஆண்டு அதிமுக ஆட்சி தோல்வி அடைந்து மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைந்தது. திமுக ஆட்சியில், மாணவர்களுக்கு காலையில் உணவு வழங்குவதற்காக ‘முதலமைச்சரின் காலை உணவு திட்டம்’ என்ற திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை அரசு தொடக்கப்பள்ளிகளில் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.

பின்னர் அந்த திட்டம் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. தற்போது புதிதாக ஆட்சிக்கு வந்துள்ள தவெக அரசு, முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை மேலும் விரிவாக்கம் செய்துள்ளது. அதன்படி, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கும் இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டது. அந்த வகையில் 15 ஆயிரத்து 454 பள்ளிகளில் படிக்கும் சுமார் 19 லட்சம் மாணவர்கள் பயனடைவார்கள்.
இந்த நிலையில், முதலமைச்சர் காலை உணவு திட்டத்தின் பெயர் மாற்றப்பட்டுள்ளது. முதலமைச்சரின் காலை உணவு திட்டத்துக்கு பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம் என்று பெயரிடப்பட்டுள்ளது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு பெரியாரின் பிறந்தநாளான செப்டம்பர் 17ம் தேதி முதல், காலை உணவு திட்டத்தை விரிவாக்கம் செய்ய முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டத்தில் உணவு வழங்குபவர்களை தேர்வு செய்வதற்கான டெண்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாகம் குடிநீர் வழங்கல் துறை டெண்டர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. டெண்டரில், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், மகளிர் சுயஉதவிக் குழுக்கள், நகர்ப்புற வாழ்வாதார குழு, சமூக சேவை அமைப்புகள் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : municipal administration department ,Chennai ,Chief Minister ,
× RELATED ஈரோட்டில் நீட் எதிர்ப்பு...