×

தமிழகத்தில் தொடரும் காவல் மரணம்; தூத்துக்குடி ஸ்டேஷனில் வாலிபர் அடித்துக் கொலை?

 

* பரபரப்பு வீடியோ வெளியானது
* 4 காவலர்கள் அடித்துக் கொன்றதாக தாய் கதறல்

தூத்துக்குடி: விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட வாலிபர் தூத்துக்குடி காவல் நிலையத்தில் அடித்துக் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக வாலிபர் நண்பர்களிடம் பேசிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தூத்துக்குடி அமுதா நகரை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி பரமேஸ்வரி. இந்த தம்பதியின் மகன் அருணாச்சலம்(29). தூத்துக்குடி லெவிஞ்சிபுரம் டாஸ்மாக் பாரில் அருணாச்சலம் வேலை செய்து வந்தார். கடந்த 18ம் தேதி தென்பாகம் எஸ்ஐ சரண்யா மற்றும் போலீசார் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக அருணாச்சலத்தை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். சிறிது நேரத்தில் அருணாச்சலத்தை போலீஸ் தாக்கியதில் மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து போலீசார் அவரது தாய் பரமேஸ்வரிக்கு தகவல் கொடுத்து வரவழைத்து, அருணாச்சலத்தை தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.இதையடுத்து அவசர, அவசரமாக அருணாச்சலம் மீது மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக ஒரு வழக்கு பதிவு செய்து போலீஸ் ஜாமீனில் விடுவித்ததாக போலீசார் கணக்கு காட்டி விட்டனர். இதற்கிடையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அருணாச்சலம் இன்று சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். இதனையடுத்து போலீசார் தாக்கியதால் உடல்நலம் பாதிக்கப்பட்டு அருணாச்சலம் இறந்துவிட்டார் எனவும், சம்பந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அது வரை உடலை வாங்க மாட்டோம் எனக் கூறி தூத்துக்குடி அரசு மருத்துவமனை முன்பு உறவினர்கள் திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. இதுகுறித்து அவரது தாய் பரமேஸ்வரி கூறுகையில், போலீசார் விசாரணை என்ற பெயரில் எனது மகனை கடந்த 18ம் தேதி அழைத்துச் சென்றனர். அப்போது மயக்கமடைந்து விட்டதாக எனக்கு தகவல் தெரிவித்தனர். நான் அரசு மருத்துவமனைக்கு சென்று பார்த்தேன். இந்நிலையில் எனது மகன் இன்று காலை உயிரிழந்து விட்டான். போலீசார் தாக்கியதில் தான் எனது மகன் உயிரிழந்துள்ளார். எனது மகன் சாவுக்கு காரணமான அந்த 4 போலீசார் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களுக்கு நீதி வேண்டும். அதுவரை அவனது உடலை வாங்க மாட்டோம் என கண்ணீர் விட்டு கதறினார்.

போலீசார் தாக்கியதாக வீடியோ
இந்நிலையில், மூன்று போலீசார் தன்னை தாக்கியதாக இறந்த வாலிபர் கூறும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இறந்த அருணாச்சலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது அவரை பார்க்கச் சென்ற அவரது நண்பர்கள் எடுத்த வீடியோவில் தன்னை தென்பாகம் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று, அங்கு வைத்து என்னை 3 போலீசார் தாக்கினர் என்று நண்பர்களிடம் கூறியுள்ளார். அந்த வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் தவெக ஆட்சிக்கு வந்த பிறகு, நாகர்கோவில் கிளைச் சிறையில் மாற்றுத்திறனாளி வியாபாரி சபரிவர்மன் அடித்துக் கொல்லப்பட்டதையும் சேர்த்து தமிழகத்தில் தொடரும் லாக்கப் மரணங்கள் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

உறவினர்கள் மறியல்
அருணாச்சலம் உயிரிழந்த நிலையில் அவரது சாவுக்கு நீதி கேட்டு உறவினர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனை முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அவசர பிரேத பரிசோதனை ஏன்?
அருணாச்சலம் இன்று காலை இறந்ததும் அவரது தந்தை நாகராஜிடம் அவசர, அவசரமாக கையெழுத்து வாங்கி பிரேத பரிசோதனை நடந்துள்ளது. இதையடுத்து முன்னாள் அமைச்சர் கீதாஜீவன், மற்றும் திமுகவினர் அரசு மருத்துவமனையில் திரண்டனர். 100க்கும் மேற்பட்டோர் திரண்டதால் மருத்துவமனையில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.

Tags : Tamil Nadu ,Thoothukudi station ,Thoothukudi ,Thoothukudi police station ,
× RELATED மக்கள் திண்டாடிக் கொண்டிருக்க துறை...