ஜெயங்கொண்டம், ஜூலை 17: ஆண்டிமடம் ஒன்றியம் கவரப்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் விழா கொண்டாடப்பட்டது. கல்லாமை இருளை நீக்க பள்ளிகள் பல திறந்து கல்வி வளர்ச்சிக்கு அரும்பாடு பட்டு கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளான ஜூலை 15ம் நாளை கல்வி வளர்ச்சி நாள் என கொண்டாடுகிறோம்.அந்நாளில் காமராஜர் உருவப்படத்தை அலங்கரித்து ஒவ்வொரு ஆண்டும் அனைத்து பள்ளிகளிலும் கொண்டாடி வரும் வேளையில் கவரப்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி வட்டார வளமைய மேற்பார்வையாளர் அருமைராஜ் தலைமையிலும், பள்ளித் தலைமை ஆசிரியர் மோகன்தாஸ் முன்னிலையிலும் கொண்டாடப்பட்டது.
மாணவ மாணவிகளுக்கு போட்டிகள் நடத்தப்பட்டது. ஓவிய போட்டியில் அதிஷ் முதலிடம், லலித் இரண்டாம் இடம், தியான் மூன்றாம் இடம், கவிதை கூறுதல் போட்டியில் மூனிஸ்வரன் முதலிடம், கிரிஜா இரண்டாம் இடம் சிவானி மூன்றாம் இடம், பேச்சுப் போட்டியில் முருகன் முதலிடம், சிவானி இரண்டாம் இடம் பிரதிக்ஷா மூன்றாமிடமும் பெற்றிருந்தனர்.வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி வட்டார வள மைய மேற்பார்வையாளர் அருமைராஜ் பரிசு பொருள்கள் வழங்கி, இனிப்புகள் வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தார்.விழாவில் அன்பு அறக்கட்டளை சார்பில் புருசோத்தமன், ரோடு டு ஸ்கூல் கருத்தாளர் ஜாக்லின் ராணி, கல்வி மேலாண்மைக் குழு சார்பில் புருசோத்தமன், மாணவச்செல்வங்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகள் அனைத்தும் உதவி ஆசிரியர் ராணி செய்திருந்தார்.
