நெல்லிக்குப்பம், ஜூலை 23: நெல்லிக்குப்பம் அருகே நள்ளிரவில் சுவர் இடிந்து விழுந்து பிளஸ் 2 மாணவன் பலியானார். கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அடுத்த காராமணிக்குப்பம் மேட்டு தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன், கூலி தொழிலாளி. இவரது மனைவி வனிதா. இவர்களின் மகன் குரு பிரசாத் (17), நெல்லிக்குப்பத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்2 படித்து வந்தார். குரு பிரசாத் தினமும் இரவு நேரத்தில் தனது பெரியப்பா மகேஷ் வீட்டில் பாட்டி சரஸ்வதியுடன் தங்கிக்கொள்வது வழக்கம். அதேபோல் நேற்று முன்தினம் இரவும் குரு பிரசாத் பெரியப்பா மகேஷ் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு அவர், பாட்டி சரஸ்வதி, பெரியப்பா மகேஷ், அவரது மகன் காமேஷ் என 4 பேரும் படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவு 1 மணியளவில் வீட்டின் சுவர் திடீரென பலத்த சத்தத்துடன் இடிந்து விழுந்தது.
இதில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மகேஷ், பாட்டி சரஸ்வதி, காமேஷ், குருபிரசாத் ஆகிய 4 பேரில் மகேஷ் தவிர 3 பேர் படுகாயம் அடைந்தனர். தலையில் பலத்த படுகாயம் அடைந்த குரு பிரசாத் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். இதுகுறித்து உறவினர்கள் நெல்லிக்குப்பம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.அதன்பேரில் நெல்லிக்குப்பம் இன்ஸ்பெக்டர் வேலுமணி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சுவர் இடிந்து விழுந்து இறந்த குரு பிரசாத்தின் உடலை கைப்பற்றி கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயமடைந்த சரஸ்வதி, காமேஷ் ஆகிய இருவரும் சிகிச்சகைக்காக கடலூர் அரசு மருத்துவமைனயில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
