×

கள்ளக்குறிச்சி அருகே நள்ளிரவில் பயங்கரம்: சொத்துக்காக கூலிப்படையுடன் சேர்ந்து தங்கையை வெட்டிக்கொன்ற அண்ணன் தடுக்க முயன்ற கணவரின் கைகளும் துண்டிப்பு

 

சங்கராபுரம், ஜூலை 20: சங்கராபுரம் அருகே சொத்துக்காக சொந்த தங்கையை கூலிப்படையினருடன் சேர்ந்து அண்ணன் அரிவாளால் வெட்டிக்கொலை செய்த சம்பவம் பரபரப்ைப ஏற்படுத்தி உள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பேரூராட்சி அலுவலக சாலை அருகே வசித்து வந்தவர் பாபு மனைவி தீபா(35). இவர்களுக்கு யஷ்வந்த்குமார் மற்றும் யோகப்பிரவீன்குமார் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இருவரும் முறையே 10ம் மற்றும் 7ம் வகுப்பு படித்து வருகின்றனர். தீபாவின் தந்தை ராஜேந்திரன். விவசாயி. இவர் தனது மனைவியுடன் வயது முதிர்வு காரணமாக மகள் வீட்டில் கடந்த இரண்டு ஆண்டாக தங்கி வந்துள்ளனர். இந்த காலக்கட்டத்தில் பேரூராட்சி அலுவலகம் அருகே தனக்கு சொந்தமான 80 சென்ட் இடத்தை மகள் தீபா கேட்டு கொண்டதன்பேரில் அவரது மகன்கள் பெயரில் தானமாக எழுதிக் கொடுத்துள்ளார்.

இதனை அறிந்த அதே ஊரை சேர்ந்த தீபாவின் அண்ணன் காந்தகுமார் கோபம் அடைந்தார். அந்த இடத்தை தனக்கு எழுதிக் கொடுக்கும்படி கேட்டு தீபாவிடம் அடிக்கடி சண்டை போட்டு வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அதற்கு அவர் மறுத்ததால் தங்கையை கொலை செய்ய திட்டமிட்ட காந்தகுமார் 5 பேர் கொண்ட கூலிப்படையை ஏற்பாடு செய்துள்ளார். காந்தகுமாரின் தாயார் அம்பிகா கடந்தவாரம் இறந்து விட்டார். அதன் எட்டாம் துக்கம் அனுசரிப்பு நிகழ்ச்சி நடந்ததால் தீபாவின் குழந்தைகள் அங்கு சென்று விட்டனர். தீபாவும், அவரது கணவர் பாபு ஆகிய இருவர் மட்டுமே வீட்டில் இருந்துள்ளனர். இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட காந்தகுமார் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி அளவில் தீபா வீட்டிற்கு சென்று வழக்கம் போல் சொத்து கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார்.

தகராறு ஒரு கட்டத்தில் கைகலப்பாக மாறிய நிலையில் காந்தகுமார் மறைத்து வைத்திருந்த மிளகாய் பொடியை தீபாவின் முகத்தில் தூவியுள்ளார். அப்போது காந்தகுமாரும், 5 பேர் கொண்ட கூலிப்படையினரும் தீபாவை அரிவாளால் சரமாரியாக வெட்டி உள்ளனர். இதனைப்பார்த்ததும் அங்கிருந்த அவரது கணவர் பாபு தடுக்க முயன்றுள்ளார். ஆனால் அவரையும் சரமாரியாக வெட்டிவிட்டு காந்தகுமார் கூலிப்படையுடன் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார்.தலை மற்றும் உடல் பகுதியில் பல்வேறு இடங்களில் வெட்டு காயத்துடன் தீபா ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் கைகள் துண்டாக வெட்டப்பட்டு தலையில் படுகாயங்களுடன் மயங்கி கிடந்த தீபாவின் கணவர் பாபுவை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சங்கராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் சங்கராபுரம் இன்ஸ்பெக்டர் பாலமுரளி தலைமையிலான போலீசார் கொலை நடந்த வீட்டுக்கு சென்று தீபாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.சொத்துக்காக உடன் பிறந்த தங்கையை மிளகாய் பொடி தூவி கூலிப்படையினருடன் சேர்ந்து கொடூரமாக கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய காந்தகுமார், கூலிப்படை கும்பலை பிடிக்க திருக்கோவிலூர் டிஎஸ்பி பார்த்திபன் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

சம்பவ இடத்திற்கு கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷஹனாஸ் வந்து கொலை நடந்த வீடு மற்றும் அதனை சுற்றுவட்டார பகுதிகளில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.உடன் பிறந்த தங்கை என்றும் பாராமல் அவரை கூலிப்படை கும்பலுடன் சேர்ந்து அண்ணன் கொடூரமாக கொலை செய்த சம்பவம் சங்கராபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொலையான தீபாவின் உடலை பார்த்து அவரது குழந்தைகள் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

 

Tags : Kallakurichi ,Sankarapuram ,Babu ,Sankarapuram Town Panchayat Office Road ,
× RELATED சிறுமியை கடத்தி ஓரின சேர்க்கை இளம்பெண்ணுக்கு 10 ஆண்டு சிறை