நாளையுடன் முடிவுக்கு வருகிறது இந்திய பொருட்கள் மீது 10% வரி தொடருமா? டிரம்ப் நிர்வாகம் ஆலோசனை

வாஷிங்டன்: இந்திய பொருட்கள் மீது டிரம்ப் நிர்வாகம் விதித்த 10 சதவீத வரி நாளையுடன் முடிவுக்கு வரும் நிலையில் புதிய வரி விகிதம் குறித்து ஆலோசனை நடந்து வருகிறது. அமெரிக்க அதிபராக டிரம்ப் இரண்டாம் முறை பதவி ஏற்றபிறகு இந்திய பொருட்கள் மீது 50 சதவீத வரி விதித்தார். பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு கடந்த பிப்ரவரி மாதம் அந்த வரியை 10 சதவீதமாக குறைந்தார்.

இந்த பொருட்கள் மீது டிரம்ப் நிர்வாகம் விதித்த 10 சதவீத வரி நாளையுடன் முடிவுக்கு வருகிறது. இந்த வரி தற்காலிகமானதாகவே விதிக்க டிரம்ப் நிர்வாகம் திட்டமிடப்பட்டிருந்தது. அதிபர் டிரம்ப்பின் அசல் வரி விதிப்பு முறையின் சட்டப்பூர்வ அடிப்படையை அமெரிக்க உச்ச நீதிமன்றம் ரத்து செய்ததைத் தொடர்ந்து, ஒரு தற்காலிக ஏற்பாடாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இப்பிரச்சினைக்குத் தீர்வு காணக்கூடிய இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் இறுதி நிலையில் இருந்தாலும், அது இன்னும் கையெழுத்தாகவில்லை.

இந்தியாவுக்கு அடுத்து என்ன வரி விதிக்கலாம் என்று தற்போது டிரம்ப் நிர்வாகம் ஆலோசனை நடத்தி வருகிறது. சமீபத்தில் பிரேசில் மீது 25 சதவீதமும், கனடா மீது 50 சதவீத வரியும் விதிக்கப்பட்டது. டிரம்ப் அதிகாரத்தை பயன்படுத்தி விதிக்கப்பட்ட இந்த வரியை போல் இந்தியா மீதும் வரி விதிக்க வாய்ப்பு உள்ளது என்ற கருத்து எழுந்துள்ளது. இதுபரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

* ஜெனரிக் மருந்துகளுக்கு புதிய வரித் திட்டம்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இறக்குமதி செய்யப்படும் ‘ஜெனரிக்’ மருந்துகளுக்கான புதிய வரி திட்டத்தை அறிவித்துள்ளார். வரும் 1ம் தேதி முதல் 2 ஆண்டுகளுக்கு, இறக்குமதி செய்யப்படும் ஜெனரிக் மருந்துகளுக்கு தொடர்ந்து பூஜ்ஜியம் சதவீத வரி மட்டுமே விதிக்கப்படும். இந்த காலக்கட்டத்திற்கு பிறகு, ஓராண்டுக்கு வரி 100 சதவீதமாக உயர்த்தப்படும், அதன்பின்னர் அது 200 சதவீதமாக மேலும் அதிகரிக்கப்படும்.

அமெரிக்காவில் உற்பத்தி ஆலைகளை அமைக்குமாறு மருந்து நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையிலேயே இந்தக் கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்கா பயன்படுத்தும் ஜெனரிக் மருந்துகளில் சுமார் 40% அளவை இந்தியா மட்டுமே வழங்குகிறது. 2028 மற்றும் 2029க்கு பிறகு விதிக்கப்படும் 100% மற்றும் 200% வரிகளால், இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் மருந்துகளின் விலை அமெரிக்க சந்தையில் கடுமையாக உயரும். அமெரிக்க சந்தையை தக்கவைத்து கொள்ள, இந்திய மருந்து நிறுவனங்கள் அமெரிக்காவிலேயே புதிய ஆலைகளைக் கட்ட வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

* சவுதி அரேபியா யுரேனியத்தை செறிவூட்ட அணுசக்தி ஒப்பந்தத்திற்கு டிரம்ப் ஒப்புதல்
சவுதி அரேபியாவின் அணுசக்தித் திட்டத்திற்காக யுரேனியத்தைச் செறிவூட்டும் திறனை வழங்கக்கூடிய ஒரு ஒப்பந்தத்திற்கு அதிபர் டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த ஒப்பந்தம் 30 ஆண்டுகள் நீடிக்கும் எனவும், இந்தத் திட்டத்தை உருவாக்குவதில் அமெரிக்க நிறுவனங்களும் ஈடுபடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: