சென்னை: அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை ஏற்றுக் கொண்டதை எதிர்த்து கட்சி கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி தாக்கல் செய்த வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 13ம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது. த.வெ.க. அரசு கடந்த மே 13ம் தேதி பெரும்பான்மை வாக்கெடுப்பு கோரிய போது கொறடா உத்தரவை மீறி, அரசுக்கு ஆதரவாக வாக்களித்தது தொடர்பாக தகுதி நீக்க விசாரணை நிலுவையில் உள்ள நிலையில்,
அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மதுராந்தகம்-மரகதம் குமாரவேல், பெருந்துறை-ஜெயக்குமார், தாராபுரம்-சத்தியபாமா, அம்பாசமுத்திரம்-இசக்கி சுப்பையா, கரூர்-எம்.ஆர்.விஜயபாஸ்கர், விராலிமலை-சி.விஜயபாஸ்கர் ஆகியோரின் ராஜினாமாவை ஏற்று சபாநாயகர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி சார்பிலும், தேசிய மக்கள் சக்தி கட்சி சார்பிலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டிருந்தன.
இந்த வழக்குகள், தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, அக்ரி கிருஷ்ணமூர்த்தி தரப்பில், ராஜினாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் தரப்பில் பதில்மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த பதில்மனுக்களுக்கு பதிலளித்து மனுத்தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் எனக் கோரப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், விசாரணையை ஆகஸ்ட் 13ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
