×

வேளாங்கண்ணி அருகே திருப்பூண்டியில் இடிந்து விழும் நிலையில் ஆபத்தான மேல்நிலை நீர்தேக்க தொட்டி

*அகற்றி புதிதாக கட்ட வலியுறுத்தல்

நாகப்பட்டினம் : வேளாங்கண்ணி அருகே திருப்பூண்டியில் ஆபத்தான நிலையில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டியை அகற்றி புதிதாக அமைக்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.வேளாங்கண்ணி அருகே திருப்பூண்டி ஊராட்சியில் உள்ள 27 வார்டுகளில் வசிக்கும் பொதுமக்களுக்கும் இங்கிருந்து தான் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. திருப்பூண்டி ஊராட்சி மன்ற அலுவலக நுழைவு வாயிலில் இந்த மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி அமைந்துள்ளது.

இந்த அலுவலகத்திற்கு தினந்தோறும் ஏராளமான பொதுமக்கள் அரசு சான்றிதழ், ரேஷன் கார்டு போன்ற பணிகளுக்காக வந்து செல்கின்றனர். இந்நிலையில் மேல்நிலை நீர்தேக்க தொட்டியின் து£ண்கள் மற்றும் மேல்புற கரைபூச்சுகள் பெயர்ந்து அவ்வப்பொழுது விழுந்து வருகிறது. இதனால் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் தலையில் பழுதடைந்த தொட்டி எப்பொழுதும் விழுந்து விடும் என அபாயத்தில் அலுவலக பணியாளர்கள் உள்ளனர்.கடந்த பல ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாமல் இருப்பதால் தொட்டியை தாங்கி நிற்கும் தூண்கள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளது.

சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து உள்ளே இருந்த இரும்பு கம்பிகள் துரு பிடித்து காணப்படுகின்றது. தொட்டியின் அடிப்பாகத்திலும் பெரிய விரிசல்கள் ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வருகிறது.
கோடைக்காலம் முடிந்து பருவமழை தொடங்கினால் இயற்கை இடர்பாடுகளை இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி தாக்குப்பிடிக்காது என அப்பகுதி பொதுமக்கள் அச்சத்துடன் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு அப்பகுதி பொதுமக்கள் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.எனவே சேதம் அடைந்த மேல்நிலை நீர்தேக்க தொட்டியை அகற்றி விட்டு புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்துத் தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

Tags : Thirupoondi ,Velankanni ,Nagapattinam ,Velankanni… ,
× RELATED வாரிசு சான்றிதழ் பரிந்துரைக்கு ரூ.4000...