×

லாரியை வழிமறித்து கரும்புகளை ருசித்த காட்டு யானை

*வாகன ஓட்டிகள், பயணிகள் அச்சம்

சத்தியமங்கலம் : தாளவாடி மலைப்பகுதியில் உள்ள மலை கிராமங்களில் கரும்பு அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது, கரும்பு அறுவடை பணி நடைபெற்று வருகிறது. அறுவடை செய்யப்படும் கரும்புகள் லாரிகளில் பாரம் ஏற்றி அடர்ந்த வனப்பகுதியில் உள்ள சத்தியமங்கலம் – மைசூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு கொண்டு செல்லப்படுகிறது.

தற்போது, கரும்பு அறுவடை சீசன் துவங்கி உள்ள நிலையில் லாரிகளில் பாரம் ஏற்றப்பட்டு வனப்பகுதி சாலை வழியாக கரும்பு லாரிகள் பயணிக்கின்றன. நேற்று காலை பண்ணாரி அம்மன் கோவில் அருகே வனப்பகுதி வழியாக தேசிய நெடுஞ்சாலையில் கரும்பு பாரம் ஏற்றிய லாரி சென்று கொண்டிருந்தபோது கரும்பின் வாசனையை நுகர்ந்த ஒரு காட்டு யானை வனப்பகுதியில் இருந்து வெளியேறி சாலையின் நடுவே லாரியை வழிமறித்தது.

காட்டு யானையை கண்ட அச்சமடைந்த ஓட்டுநர் லாரியை நிறுத்தினார். அருகே வந்த காட்டு யானை லாரியின் மீது அடுக்கி வைக்கப்பட்டிருந்த கரும்பு துண்டுகளை தனது தும்பிக்கையால் பறித்து சாப்பிட்டது. இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காட்டு யானையை கண்ட வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகள் அச்சம் அடைந்தனர்.

சிறிது நேரம் கரும்புத்துண்டுகளை சுவைத்த காட்டு யானை அங்கிருந்து நகர்ந்ததும் வாகனங்கள் புறப்பட்டு சென்றது. வனப்பகுதி சாலையில் கரும்பு பாரம் ஏற்றிச்செல்லும் லாரிகள் தார்ப்பாய்களால் மூடப்பட்டு கொண்டு செல்ல வேண்டும் என வனத்துறை கட்டுப்பாடு விதித்துள்ள நிலையில் கரும்பு பாரம் மூடப்படாமல் லாரிகளில் கொண்டு வரப்படுவதால் யானைகள் லாரியை வழிமறிப்பதாக வாகன பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Tags : Sathyamangalam ,Thalavadi hills ,
× RELATED வாரிசு சான்றிதழ் பரிந்துரைக்கு ரூ.4000...