சென்னை: சென்னை மெரீனாவில் ரூ.78.40 லட்சத்தில் குளிா்சாதன வசதியுடன் கூடிய பேருந்து நிறுத்தம் அமைப்பதற்கான ஒப்பந்தத்தை மாநகராட்சி நிா்வாகம் கோரியுள்ளது.
சென்னையில் பொதுமக்களின் வசதிக்காக பெரம்பூர், ராயபுரம், கொளத்தூர் மற்றும் துறைமுகம் ஆகிய 4 இடங்களில் திமுக ஆட்சியில் ஏற்கனவே ரூ.8 கோடி மதிப்பில் குளிர்சாதன பேருந்து நிறுத்தங்கள் அமைக்க திட்டமிடப்பட்டன. இதில் கொளத்தூர் மற்றும் வால்டாக்ஸ் சாலையில் உள்ள பேருந்து நிறுத்தங்கள் தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளன.
இதனைத் தொடர்ந்து, மக்கள் அதிகம் கூடும் மெரினாவிலும் இந்த நவீன வசதி வரவுள்ளது. இந்த டெண்டர் நடைமுறைகள் முடிந்தவுடன் அடுத்தகட்ட பணிகள் விரைவாகத் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மெரினா கடற்கரை சாலையில் அண்ணா சதுக்கம் அருகே குளிா்சாதன வசதியுடன் கூடிய பேருந்து நிறுத்தத்தை அமைக்க சென்னை மாநகராட்சி சாா்பில் ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் ரூ.78.40 லட்சத்தில் குளிா்சாதன வசதி பேருந்து நிறுத்தம் அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பேருந்து நிறுத்தத்தில் சொகுசான இருக்கைகள், மொபைல் சார்ஜிங் பாயின்ட், டிஜிட்டல் தகவல் பலகைகள், நவீன காத்திருப்பு அறைகள் போன்ற நவீன வசதிகள் இடம்பெறும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.
