×

பாடநூல்களில் எழுத்து குறையும் வண்ணப் படங்கள் நிறையும்: அமைச்சர் ராஜ்மோகன் தகவல்

சென்னை: பாடநூல்களில் எழுத்துக்களைக் குறைத்து வண்ணப் படங்கள் நிறைந்த புத்தகங்களாக மாற்றவுள்ளோம் என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். சென்னை கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலகக் கூட்டரங்கில் நேற்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தலைமையில் பாடத்திட்ட உயர்மட்ட வல்லுநர் குழு மற்றும் கலைத்திட்ட வடிவமைப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கலைத்திட்ட வடிவமைப்புக் குழு தலைவர் மயில்சாமி அண்ணாதுரை, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத் தலைவர் நாராயணன் உள்ளிட்ட உயர்மட்ட மற்றும் கலைத்திட்டக் குழுவினர் நேரில் கலந்துகொண்டு பள்ளிக்கல்விக்கான பாடத்திட்டம், பாடநூல்களின் கட்டமைப்பு, பாடப்பொருள் குறித்த தம் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் பள்ளிக் கல்வித்துறையின் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தரமோகன், பள்ளிக்கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன், தொடக்கக் கல்வி இயக்குநர் நரேஷ், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குநர் லதா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் ராஜ்மோகன் பேசியதாவது: கற்பதற்குக் கடினமான கணிதப் பாடம் இனிமையாகக் கதைகளின் வழியே கற்றுக்கொடுக்கப்படவுள்ளது. புத்தகப் பை சுமை குறைக்கப்படும். பாடநூல்கள் பாடங்கள் நிறைந்த புத்தகமாக இல்லாமல், எழுத்துகள் குறைந்து வண்ணப் படங்கள் நிறைந்த புத்தகங்களாக மாற்றவுள்ளோம்.

செயற்கை நுண்ணறிவில் எவ்வாறு தங்களுக்குத் தேவையானதைச் செய்ய முடியும் என்பதை மாணவர்களுக்கு கற்றுகொடுக்கவுள்ளோம். இஸ்ரோவின் உதவியுடன் பள்ளிக் குழந்தைகள் செயற்கைக்கோள்களை உருவாக்கும் வகையிலான கல்வித் திட்டத்தை உருவாக்குவோம். உலக அளவில் செய்தித்தாள் வாசிக்கும் பழக்கம் குறைந்து, திரைகளைப் பயன்படுத்துவது அதிகரித்துள்ள நிலையில், பள்ளிகளில் செய்தித்தாள் வாசிப்பு நேரத்தை உருவாக்கி, செய்தித்தாள் வாசிப்பை ஊக்குவிக்க உள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.

* வால் இல்லா அணில்கள் தான் ஸ்பெஷல்..
நான் வெளிநாட்டில் வேலை பார்த்தபோது வால் இல்லாத அணிலைப் பார்த்தேன். அணிலுக்கு வால்தான் அழகு; ஆனால் இந்த அணிலுக்கு வால் இல்லை என நண்பர்கள் சொல்லிச் சிரித்தார்கள். நான் சொன்னேன், அந்த அணில் குட்டிகளைக் காப்பற்ற பாம்பு அல்லது பறவைகளுடன் சண்டையிட்டுத் தனது வாலை இழந்து இருக்கலாம். வால் இருக்கும் அணிலைவிட வால் இல்லாத அணில் தனித்துவமானது எனச் சொன்னேன். அதுபோல ஆசிரியர்கள், சக மாணவர்கள் குழந்தைகளின் நிறம், உயரம், உருவத்தின் அடிப்படையில் கூப்பிடவேண்டாம் என அமைச்சர் ராஜ்மோகன் பேசினார்.

Tags : Minister ,Rajmohan ,Chennai ,Anna Centenary Library ,Kotturpuram, Chennai ,
× RELATED அமைதியான முறையில் போராடிய இளைஞர்கள்...