காரைக்கால், ஜூன் 21: காரைக்காலில் சிறுமியை கடத்தி ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்ட இளம்பெண்ணுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், உடந்தையாக இருந்தவருக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து போக்சோ நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது.
காரைக்காலில் கடந்த 2019ம் ஆண்டு 17 வயது சிறுமி மாயமானதாக காரைக்கால் நகர காவல் நிலையத்தில் பெற்றோர்தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. போலீசார் மேற்கொண்ட விசாரணையில் கோட்டுச்சேரி ஜீவா நகரை சேர்ந்த கலைஅமுது (22) என்பவர், சிறுமியிடம் நெருங்கி பழகி ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டதும், சிறுமியை திருமணம் செய்வதாகக்கூறி, சென்னைக்கு கடத்திச் சென்றதும், இதற்கு காரைக்கால் லெமர் வீதியை சேர்ந்த கணேசன் (48) என்பவர், உடந்தையாக இருந்து, சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து கலை அமுது, கணேசன் ஆகிய இருவரையும் போக்சோ வழக்கு பதிந்து கைது செய்தனர்.
இவ்வழக்கு காரைக்கால் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. வழக்கினை நீதிபதி மோகன் விசாரித்து, கலை அமுதுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும், கணேசனுக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்தார். இதனை தொடர்ந்து இருவரும் புதுச்சேரி சிறையில் அடைக்கப்பட்டனர்.
