தேனி, ஜூலை 21: ரயில்வே தேர்வு வாரியத்தின் மூலம் நடத்தப்பட உள்ள லோகோ பைலட் பணிக்கான தேர்விற்கு மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் இலவச பயிற்சி வகுப்பு வருகை 23ம் தேதி முதல் துவங்க உள்ளது. ரயில்வே தேர்வு வாரியத்தின் சார்பில் 11,127 உதவி லோகோ பைலட் காலிப்பணியிடங்களுக்கு சிபிடி1 தேர்விற்கான அறிவிப்பு கடந்த ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டது.
இத்தேர்விற்கான கட்டணமில்லாப் பயிற்சி வகுப்பு தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் வருகிற 23ம் தேதி (வியாழக்கிழமை) முதல் துவங்கப்பட உள்ளது. இப்பயிற்சியின்போது கட்டணமில்லாபாடக்குறிப்புகள் வழங்கப்பட உள்ளது. மாதிரித் தேர்வுகளும் நடத்தப்படும். மேலும் இம்மையத்தில் போட்டித் தேர்விற்கு தயாராவதற்கான அனைத்து வகை புத்தகங்கள் அடங்கிய நூலகம் செயல்பட்டு வருகிறது.
இவ்வலுவலகத்தின் மூலம் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட இலவச பயிற்சி வகுப்புகளில் பயின்று, தேர்ச்சி பெற்ற 38 பேர் தற்போது அரசின் பல்வேறு துறைகளில் பணிபுரிந்து வருகின்றனர். எனவே, ரயில்வே தேர்வு வாரியத்தின் மூலம் உதவி லோகோ பைலட் பணியிடத்திற்கு நடத்தப்படும் சிபிடி 1 தேர்விற்கு விண்ணப்பம் செய்த விண்ணப்பதாரர்கள் நேரடி பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன்பெறலாம். இப்பயிற்சிக்கு வருகைபுரியும் விண்ணப்பதாரர்கள் தேர்விற்கு விண்ணப்பம் செய்த விண்ணப்ப நகல், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும். பயிற்சி வகுப்பில் சேர்வது தொடர்பாக தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் அல்லது 6379268661 என்ற தொலைப்பேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்துக்கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் வைத்திநாதன் தெரிவித்துள்ளார்.
