×

திருப்பத்தூர் மாவட்ட வன அலுவலக சந்தனமரக்கிடங்கில் ஒன்றரை டன் செம்மரக்கட்டைகள் திடீர் மாயம்: வனத்துறை அமைச்சர் வந்த நிலையில் பரபரப்பு

 

திருப்பத்தூர்: வனத்துறை அமைச்சர் வந்து சென்ற நிலையில் திருப்பத்தூர் மாவட்ட வன அலுவலகத்தில் அமைந்துள்ள சந்தனமரக்கிடங்கில் கடந்த 18ம் தேதி இரவு நேரத்தில் ஒன்றரை டன் செம்மரக்கட்டைகள் திடீரென மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆசியா கண்டத்திலேயே மிக முக்கியமான சந்தன மரக்கிடங்காக திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள சந்தன மரக் கிடங்கு செயல்பட்டு வருகிறது. இக்கிடங்கில் 100 டன்னுக்கு மேலாக சந்தன மரங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இதுதவிர ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழகத்துக்கு கடத்தி வரப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட 1000 டன்னுக்கும் மேற்பட்ட செம்மரக்கட்டைகளும் இருக்கும்.

இந்த கிடங்கில் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய நிலையில் வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் சுழல் கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணிநேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த முக்கியத்துவம் வாய்ந்த சந்தனமரக்கிடங்கில் கடந்த 18ம் தேதி நள்ளிரவு நேரத்தில் வன அலுவலகத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆப் செய்துவிட்டு ஒன்றரை டன் செம்மரக்கட்டைகள் கடத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த 18ம் தேதி ஏலகிரி மலையில் கோடைவிழா நடந்தது. இதையொட்டி வனத்துறை அமைச்சர் ரஞ்சித்குமார் கடந்த 2 நாட்களாக மாவட்டத்தில் தங்கியிருந்தார். வனத்துறை அமைச்சர் மாவட்டத்தில் இருந்தபோது இத்தகைய சம்பவம் நடந்திருப்பதாக கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் மகேந்திரனை தொடர்பு கொண்டு உண்மை நிலை குறித்து கேட்டறிய செய்தியாளர்கள் பலமுறை முயன்றனர். அதேபோல் அவரை நேரில் சந்திக்கவும் மாவட்ட வன அலுவலகத்தின் முன் திரண்டனர். ஆனால் அவரை சந்திக்கவோ அல்லது செல்போனில் தொடர்பு கொள்ளவோ முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags : Tirupattur District Forest Office ,Tirupattur ,
× RELATED சப்தகன்னியம்மன் கோயிலில் தீ மிதி திருவிழா