×

தெரு நாய்கள் பிரச்னையை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை: தமிழக அரசு மீது உயர் நீதிமன்றம் அதிருப்தி

சென்னை: தெரு நாய் பிரச்னையை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை என்று தமிழக அரசு மீது சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. தெரு நாய்களிடம் இருந்து பொதுமக்களை பாதுகாப்பது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு, கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் போன்ற பொது இடங்களில் இனப்பெருக்க கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்காக பிடிக்கப்படும் நாய்களை மீண்டும் அதே பகுதிகளில் விடாமல், பராமரிப்பு மையங்களுக்கு அனுப்ப வேண்டும்.

அனைத்து மாவட்டங்களிலும் போதுமான இனப்பெருக்க கட்டுப்பாட்டு மையங்களை ஏற்படுத்த வேண்டும், தடுப்பூசி மையங்களில் போதுமான கால்நடை மருத்துவர்கள், ஊழியர்களை நியமிக்க வேண்டும். கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்களில் சுற்றித்திரியும் தெரு நாய்களை அப்பகுதியில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும். இந்த உத்தரவுகளை அமல்படுத்தும் வகையில், அனைத்து உயர் நீதிமன்றங்களும் தாமாக முன் வந்து வழக்குகளை விசாரணைக்கு எடுத்து கண்காணிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவின் அடிப்படையில் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்த சென்னை உயர் நீதிமன்றம், நீதிமன்ற உத்தரவை அமல்படுத்துவது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழ்நாடு, புதுச்சேரி மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது. இந்த வழக்கு, தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அறிக்கை தயாராக இருப்பதாகவும், அதனை தாக்கல் செய்ய ஒரு வார கால அவகாசம் வேண்டும் என்று தமிழக அரசு தரப்பில் கோரப்பட்டது.

இதை ஏற்று, அறிக்கை தாக்கல் செய்ய ஒரு வார அவகாசம் வழங்கி, விசாரணையை ஜூலை 30ம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், தெரு நாய் கடி சம்பவங்கள் தினந்தோறும் நடக்கின்றன. பெரும்பாலும் குழந்தைகள், தெரு நாய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். உச்ச நீதிமன்ற உத்தரவின்படி மாதந்தோறும் அறிக்கை அளிக்க வேண்டியுள்ளது. தெரு நாய்கள் பிரச்னையை தடுக்க எந்த நடவடிக்கையும் அரசு எடுத்ததாக தெரியவில்லை.

சென்னை உயர் நீதிமன்றத்திலும் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. தெரு நாய் தொல்லையை கட்டுப்படுத்த என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?. அரசின் அறிக்கையில் வேண்டுமானால் நடவடிக்கை குறித்த விவரங்கள் இருக்கலாம். ஆனால் நேரில் எதுவும் தெரியவில்லை. எனவே, உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

Tags : High Court ,Tamil Nadu government ,Chennai ,Madras High Court ,Supreme Court ,
× RELATED அமைதியான முறையில் போராடிய இளைஞர்கள்...