ஆரணி, ஜூலை 17: ஆரணி அருகே கடிதம் எழுதிவிட்டு கணவனும், மனைவியும் நேற்று காலை ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர். திருவண்ணாமலை மாவட்டம் நல்லவன்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரகுமார்(42). இவர் அரியானா மாநிலத்தில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் சூபர்வைசராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி சிந்து(38). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். சந்திரகுமார் விடுமுறை மற்றும் விஷேச நாட்களில் மட்டும் சொந்த ஊருக்கு வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சந்திரகுமாருக்கு நுரையீரல் தொற்று ஏற்பட்டு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதனால் சந்திரகுமார் சொந்த ஊருக்கு கடந்த 11ம் தேதி திருவண்ணாமலைக்கு வந்தார். அப்போது திருவண்ணாமலை மற்றும் வேலூரில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் நோய் குணமாகவில்லையாம். இதனால் சரிவர வேலைக்கு செல்ல முடியவில்லை, குடும்பத்தை கவனிக்க முடியவில்லை என சந்திரகுமார் மனவேதனையில் இருந்துள்ளார்.
மேலும் இதை மனைவியுடம் கூறி புலம்பி வந்துள்ளார். இதனால் சிந்துவுக்கும் மனஉளைச்சல் ஏற்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு சந்திரகுமார், சிந்து இருவரும் வேலூரில் உள்ள மருத்துவமனைக்கு சென்று வருவதாக குடும்பத்தினரிடம் கூறிவிட்டு சென்றுள்ளனர். ஆனால் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அக்கம்பக்கம், உறவினர் வீடுகள் என பல்வேறு இடங்களில் தேடியும் இருவர் குறித்து எவ்வித தகவலும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து சந்திரகுமாரின் உறவினர் திருவண்ணாமலை மேற்கு காவல்நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் தேடி வந்தனர். இந்நிலையில் ஆரணி அடுத்த வடமாதிமங்கலம் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் நேற்று காலை அடையாளம் தெரியாத ஆண், பெண் சடலங்கள் நசுங்கிய நிலையில் கிடந்துள்ளது. இதுகுறித்து காட்பாடி ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் ரயில்வே இன்ஸ்பெக்டர் சித்ரா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலங்களை கைப்பற்றினர். அப்போது சடலங்கள் அருகே கடிதம் இருந்தது. அந்த கடிதத்தில், ‘உடல் நிலைபாதிக்கப்பட்டு வந்ததால், என்னால் வேலைக்கு செல்லமுடியவில்லை. இதனால் குடும்பத்தை கவனிக்க முடியவில்லை. கடன் பிரச்னை ஏற்படும் என்பதால் தற்கொலை செய்துகொள்கிறோம்’ என எழுதப்பட்டிருந்ததாக ெதரிகிறது.
தொடர்ந்து இவர்கள் யார் என விசாரணை நடத்தினர். அதில் சில நாட்களுக்கு முன்பு காணாமல் போன சந்திரகுமார், அவரது மனைவி சிந்து என்பது தெரிய வந்தது. சந்திரகுமாருக்கு நோய் குணமடையாததால் விரக்தியில் தம்பதி இருவரும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர். அதன்படி ேநற்று அதிகாலை 4.30 மணியளவில் நஸ்ராபூர்- திருவண்ணாமலை நோக்கி வந்த எக்ஸ்பிரஸ் ரயில் முன் பாய்ந்து இருவரும் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.இதையடுத்து போலீசார், 2 சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நோய் கொடுமை காரணமாக கணவன், மனைவி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
