ஆதிதிராவிட நலத்துறையாக சமூகநீதி துறையை மாற்ற வேண்டும்: வன்னி அரசு திடீர் பல்டி

திண்டிவனம்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் ரோசனையிலுள்ள தாய்த்தமிழ் பள்ளியில், காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு ஒலக்கூர், மயிலம், மரக்காணம் ஒன்றியத்தில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு விருது வழங்கி, சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு பேசுகையில், ஒன்றிய பா.ஜ., அரசு, இந்தியையும் சமஸ்கிருதத்தையும் திணித்துக் கொண்டிருக்கிறது. இதை தடுக்க வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கின்றது. தமிழ்நாட்டில் அன்னை தமிழை பாதுகாக்க வேண்டும், என்றார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், மேகதாதுவில் அணை கட்டப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக சட்டமன்றத்தில் ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சமூக நீதித்துறையை, ஏற்கனவே இருந்தது போல் ஆதிதிராவிட நலத்துறையாக மாற்றுவது என்பது, வி.சி.க தலைவர் திருமாவளவன் கூறிய கருத்துதான், என்னுடைய கருத்து. தொண்டர்களின் கருத்தும் இதுதான். எனவே இத்துறையை மீண்டும் ஆதிதிராவிட நலத்துறையாக மாற்ற வேண்டும்.

அரசு வழக்கறிஞர் நியமனத்தில் எந்தவித முறைகேடும் நடந்ததாக நிரூபணமாகவில்லை என்று சட்டத்துறை அமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளார். சேலத்தில் அம்பேத்கர் சிலை வைப்பதற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். அம்பேத்கர் ஒரு பொதுவான தலைவர். அவரை குறிப்பிட்ட சாதி வளையத்திற்குள் கொண்டு வருவது மோசமான செயலாகும், என்றார்.

Related Stories: