விழுப்புரம்: தமிழகத்தில் அரசியல் மாற்றத்துக்கு அகரமிட்ட வைகோ, இன்று விஜய் காலடியில் வந்து விழுந்து கிடக்கிறார் என்று நாஞ்சில் சம்பத் விமர்சித்துள்ளார். விழுப்புரத்தில் நேற்று முன்தினம் நடந்த தவெக பொதுக்கூட்டத்தில் கொள்கைபரப்பு செயலாளர் நாஞ்சில்சம்பத் பேசியதாவது: அறிஞர் அண்ணா 1949 செப்டம்பர் 17ல் திமுகவை தொடங்கினார். 18 ஆண்டுகளுக்குப்பிறகு காங்கிரஸ் கட்சியை அப்புறப்படுத்தி அண்ணா ஆட்சிக்கு வந்தார். எம்ஜிஆர் 1972ல் அதிமுகவை தொடங்கி 5 வருடத்தில் 1977ல் ஆட்சிக்கு வந்தார்.
1994 மே 6ம்தேதி அரசியல் மாற்றத்திற்கு அகரமிட்ட வைகோவால் அதை செய்யமுடியவில்லை. அவரே இன்று விஜய்யின் காலடியில் வந்து விழுந்து கிடக்கிறார். அதேபோல் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த மூப்பனார் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியை தொடங்கினார். அந்த கட்சி தற்போது ஒரு இடத்தில் கூட வெற்றிபெறவில்லை. பாஜவுடன் கைகோர்த்ததன் விளைவு கல்லறைக்குள் போய்விட்டது. தேமுதிகவை விஜயகாந்த் தொடங்கினார். அவர் மறைவுக்குபிறகு வழிநடத்திவரும் பிரேமலதா 5 ஆண்டுகள் வேறொரு கட்சிக்கு குத்தகைக்கு விட்டுவிட்டார்.
உலகநாயகன் கமலஹாசன் அரசியல் மாற்றம் வேண்டும் என்று மக்கள் நீதிமய்யத்தை தொடங்கி ஒரு சட்டமன்ற உறுப்பினர்கூட இல்லாமல் கையில் இருந்த டார்ச்சை தேடிக்கொண்டிருக்கிறார். நாம் தமிழர் என்று தமிழ்தேசியம் பேசிய சீமான், பிரபாகரன் உடன் சாப்பிட்டு இருக்கிறேன் என்று பொய் சொல்லி தமிழர்களை ஏமாற்றி பல ஆயிரம் கோடிகளை தேடிக்கொண்டுள்ளார். சீமான் பெரியாரை அவமதித்து அண்ணாவை கேவலமாக பேசி திராவிடத்தை பழிக்கிறேன் என கூறி தான் தொடங்கிய கட்சியை நடத்தமுடியாமல் திண்டாடி வருகிறார். தவெக வருகையால் நாம் தமிழர் கட்சி கல்லறைக்குள் போய்கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலோடு நாம் தமிழர் கட்சி உயிரோடு இருக்காது. எங்களுக்கு மேஜிக் நம்பர் 118 கிடைக்கவில்லை. இதற்காக நான் கண்ணீர் சிந்தினேன். இவ்வாறு அவர் கூறினார்.
