கோபி: எடப்பாடி பழனிசாமி செய்யாத காரியம் ஒன்றுமில்லை என அமைச்சர் செங்கோட்டையன் காட்டமாக கூறினார். ஈரோடு மாவட்டம், கோபி நெடுஞ்சாலைத்துறை அலுவலக வளாகத்தில் தரக்கட்டுப்பாட்டு மையம் மற்றும் ஆய்வகத்தை நேற்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் திறந்து வைத்தார்.
இதைத்தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
எல் நினோ பாதிப்புகளை ஆய்வு செய்ய சிறந்த வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வது குறித்து ஆய்வு செய்து துறைக்கு அறிக்கை வழங்கும். முதல் முறையாக தமிழ்நாட்டில் மட்டும்தான் இதுபோன்று குழு அமைக்கப்பட்டு உள்ளது.
எங்களுடைய நோக்கம் பூரண மதுவிலக்கு. கோயில்கள், பள்ளிகள், பேருந்து நிலையங்கள் பகுதிகளில் இருந்த மது கடைகள் உடனடியாக மூடப்பட்டுள்ளன. படிப்படியாக மதுக்கடைகள் மூடப்படுவது குறித்து துறை அமைச்சர் ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பார்.
இந்த அரசை குதிரை பேரம் என்றெல்லாம் சொல்ல கூடாது. எடப்பாடி பழனிசாமி செய்யாத காரியம் ஒன்றுமில்லை. அவர் நெஞ்சிலே கை வைத்து சொல்ல வேண்டும். 47 பேரை வைத்துக்கொண்டு முதலமைச்சர் ஆகலாம் என புதுச்சேரியில் பேசினாரா இல்லையா?. முஸ்லிம் லீக் தலைவர் தெளிவாக சொல்லியிருக்கிறார். அதற்கு இதுவரை எடப்பாடி பதில் தரவில்லை. இன்று எடப்பாடி பொய் என கூறுகிறார். அதிமுகவிலிருந்து வெளியே வந்தவர்கள் அனைவரும் அதற்கான காரணத்தை கூறி விட்டார்கள்.
நடந்தாய் வாழி காவிரி திட்டம் செயல்படுத்த வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கேட்டுள்ளார். அதற்கான பணிகளை மேற்கொள்ள கதர்துறை அமைச்சர் டெல்லி சென்று ஒன்றிய அரசிடம் வேண்டுகோள் வைத்துள்ளார். 2006ல் அதிமுகவுடன் கூட்டணி வைத்தது முதல் தவறு என வைகோ கூறியது அவர் கருத்து. அதற்கு மாற்று கருத்து சொல்வது சரியாக இருக்காது. வறட்சி நிவாரணமாக ஏக்கருக்கு 25,000 ரூபாய் தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது அவர்களின் கோரிக்கை. நிதி நிலைமைக்கு ஏற்ப முதலமைச்சர் முடிவு செய்வார். இவ்வாறு அவர் கூறினார்.
