லண்டன்: கொரோனா காலத்தில் சிறு தொழில்களுக்கு வழங்கப்பட்ட அரசின் பவுன்ஸ் பேக் லோன் திட்டத்தில் மோசடி செய்து சுமார் 2.16 லட்சம் பவுண்டு கடன் பெற்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரூபாலி வாக் (50) என்பவருக்கு இங்கிலாந்து நீதிமன்றம் 2 ஆண்டு 3 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்துள்ளது. வேல்ஸைச் சேர்ந்த ரூபாலி வாக், தனது நான்கு நிறுவனங்களின் வருவாயை போலியாக உயர்த்திக் காட்டி, 2020ம் ஆண்டு மே முதல் செப்டம்பர் வரை 5 முறை கடன் பெற்றதாக விசாரணையில் தெரியவந்தது.
அந்தத் தொகையை தொழில் வளர்ச்சிக்குப் பயன்படுத்தாமல், தனிப்பட்ட கடன்களை அடைக்கவும், பங்குகள் வாங்கவும், இந்தியாவிற்கு பணம் அனுப்பவும் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டது. முதலில் குற்றத்தை மறுத்த அவர், பின்னர் தனியாகவே மோசடியில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டார். இந்த மோசடி மூலம் பெறப்பட்ட பணத்தை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இங்கிலாந்து திவால் சேவை தெரிவித்துள்ளது.
