ஏழாயிரம்பண்ணை, ஜூலை 18: அனுமதியின்றி சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டார். வெம்பக்கோட்டை அருகே ஆலங்குளம் சுற்றுவட்டார பகுதியில் சட்ட விரோதமாக பட்டாசு தயாரிக்கப்படுவதாக ஆலங்குளம் போலீசார் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் ஆலங்குளம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ஆனந்தகுமார் தலைமையில் அதிகாரிகள் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது கல்லம்மநாயக்கன்பட்டி அருகே உள்ள ஜெய்சங்கர் என்பவருக்கு சொந்தமான பட்டாசு கடையின் பின்புறம் உள்ள சாலையில் தகர செட்டில் அனுமதியின்றி பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அரசு அனுமதி இன்றி சட்ட விரோதமாக எளிதில் தீ பற்றி வெடிக்க கூடிய பட்டாசுகளை தயாரித்து பேக்கிங் செய்த தகர செட் உரிமையாளர் ஜெய்சங்கர் மீது ஆலங்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அவரை கைது செய்து சட்டவிரோதமாக தயாரித்த சுமார் ரூ.10000 மதிப்பிலான வெடிகளை பறிமுதல் செய்தனர்.
