திருச்சி, ஜூலை 18: திருச்சி கிழக்கு தாலுகா அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை நடந்திய சோதனையில் ரூ.7,000 பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், ரூ.12 லட்சம் ஆன்லைன் பரிவர்த்தனை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் நேற்று தாலுகா அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர். இதனையடுத்து நேற்று மாலை 5 மணி அளவில் திருச்சி லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி மணிகண்டன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சக்திவேல், சேவியர் ராணி மற்றும் போலீசார் திருச்சி கிழக்கு தாலுகா அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டனர்.
தாலுகா அலுவலகத்தின் முதல் தளத்தில் உள்ள நில அளவை பிரிவு பணியில் இருந்த 4 சர்வேயர்களின் வங்கி கணக்குகள் மற்றும் செல்போன்களை ஆய்வு செய்தனர். அப்போது கடந்த 3 மாதங்களில் 12 லட்சம் ரூபாய் அளவிற்கு ஜி.பே. மூலம் பரிவர்த்தனை செய்து இருந்ததை கண்டு பிடித்தனர். மேலும் ரூ.7,000 பணம் பறிமுதல் செய்தனர். இந்த பணத்தை அவர்கள் எப்படி, யாரிடம் இருந்து வாங்கினார்கள்? என்பது பற்றி தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
