சிங்கப்பூர்: மேற்கு ஆசிய பதற்றங்களுக்கு மத்தியில் அந்நியச் செலாவணிக் கையிருப்பை வலுப்படுத்தவும், ரூபாய்க்கு ஆதரவளிக்கவும் ஆன உத்தியின் ஒரு பகுதியாக, வரையறுக்கப்பட்ட காலத்திற்கு எப்சிஎன்ஆர் எனப்படும் வெளிநாட்டு கரன்சி திட்டத்தின் வைப்புத்தொகைகளுக்கு அதிக வட்டி விகிதங்களை வழங்க வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. வெளிநாடு வாழ் இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளியினர் தங்கள் வெளிநாட்டு வருமானத்தை இந்திய வங்கிகளில் முக்கிய அந்நியச் செலாவணிகளில் பாதுகாப்பாக வைப்பு செய்து பெருக்கிக்கொள்ள இது அனுமதிக்கிறது.
இவை பாரம்பரிய நிலையான வைப்புத்தொகைகளைப் போலவே செயல்படுகின்றன. ஆனால் பணம் இந்திய ரூபாயாக மாற்றப்படாமல் அந்நியச் செலாவணியிலேயே இருக்கும். இந்த நிலையில்,இந்திய பட்டயக் கணக்காளர்கள் அமைப்பின் சிங்கப்பூர் கிளை, அதன் சர்வதேச விவகாரக் குழு மற்றும் அதன் 25 வெளிநாட்டுக் கிளைகளுடன் இணைந்து உலகளாவிய இணையவழிக் கருத்தரங்கு நடந்தது. இதில்,சிங்கப்பூர் பட்டயக்கணக்காளர் சங்க தலைவர் சஞ்சய் கட்டானி பேசுகையில், வெளிநாட்டு வாழ் இந்தியர் கொண்டு வரும் வெளிநாட்டு கரன்சி எப்சிஎன்ஆர் திட்டத்தின் மூலம் இந்தியாவிற்கு ரூ.7 லட்சம் கோடி அந்நியச் செலாவணி வரவைக் கொண்டுவர வாய்ப்புள்ளது.
இத்திட்டத்தின் கீழ் வங்கிகள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு அதிக வட்டி விகிதங்களை வழங்குகின்றன. இதுவரை ரூ.96 ஆயிரம் கோடி திரட்டப்பட்டுள்ளது. இந்த திட்டம் முடிவடையும் காலமான செப். 30ம் தேதி வரை ரூ.7 லட்சம் கோடி வரை அந்நிய செலாவணி இந்தியாவுக்கு வர வாய்ப்பு உள்ளது என்றார்.
