புதுடெல்லி: கடந்த ஏப்ரல் மாதம் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்ற முதல்வர் விஜய், பின்னர் திருச்சி கிழக்கு தொகுதி பதவியை ராஜினாமா செய்தார். அதேப்போன்று கரூர் தொகுதி எம்.ஆர். விஜயபாஸ்கர், விராலிமலை தொகுதி சி. விஜயபாஸ்கர், பெருந்துறை தொகுதி ஜெயக்குமார் மற்றும் அம்பாசமுத்திரம் தொகுதி இசக்கி சுப்பையா ஆகியோரும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். இந்த நிலையில், இவர்களின் வெற்றியை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளதால், அந்த வழக்குகள் முடிவடையும் வரை இடைத்தேர்தலை அறிவிக்கக் கூடாது எனக்கோரி, தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் அனைத்தும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இதேபோன்று இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திலும் அதிமுக எம்பி இன்ப துரை தரப்பில் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்திய தேர்தல் ஆணையத்தின் சார்பாக மீடியா தொடர்பான இரண்டு நாள் மாநாடு டெல்லியில் நேற்று நடைபெற்றது. அதில், தேர்தல் நடத்துவது எப்படி? அதன் விதிமுறைகள் என்ன, என்னென்ன மாதிரியான வழிமுறைகளில் தேர்தல் நடத்தப்படும் வாக்குச்சீட்டு எண்ணுவது எப்படி, எண்ணும்போது அதற்கான நடைமுறைகள் என்ன, அதிகாரிகளின் நடவடிக்கைகள் என்ன ஆகியவை குறித்து விளக்கமாக ஆலோசிக்கப்பட்டது. நேற்று நடந்த முதல் நாள் கூட்டத்தில் பல்வேறு முக்கிய ஆலோசனைகள், அதாவது தேர்தல் நடைபெறும் விதிமுறைகள் உட்பட அனைத்து தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்பட்டது.
இது போன்ற நிலையில் தமிழகத்தில் காலியாக இருக்கும் தொகுதிகளுக்கு எப்போது இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று செய்தியாளர்கள் தரப்பில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த இந்திய தலைமை தேர்தல் ஆணையர், தமிழகத்தில் காலியாக இருக்கும் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவது தொடர்பாக தற்போது எந்தவித ஆலோசனையும் நாங்கள் மேற்கொள்ள வில்லை. குறிப்பாக மக்கள் பிரதிநிதி சட்டத்தின் படி ஆறு மாதம் வரைக்கும் அதற்கான அவகாசம் உள்ளது. எனவே தற்போது அதற்கான அவசரம் இல்லை. மேலும் காலியாக இருக்கும் தொகுதிகள் தொடர்பாக தேர்தல் வழக்குகள் அனைத்தும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது அதனையும் நாங்கள் கருத்தில் கொள்ள வேண்டிய சூழ்நிலை இருக்கிறது என்று தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்கள் எழுப்பிய அடுத்த கேள்வியில், தமிழக முதல்வர் ஜோசப் விஜய் என்ற பெயரில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் பல வேட்பாளர்கள் களம் இறக்கப்பட்டனர். இதுபோன்ற தேர்தல் தந்திரங்களை அரசியல் கட்சிகள் செயல்படுத்தி வரும் நிலையில் இதனை தடுக்க தேர்தல் ஆணையத்திடம் ஏதேனும் திட்டங்கள் இருக்கிறதா? என்று கேட்டனர். அதற்கு மேலும் ஒரே பெயரில் பல்வேறு நபர்கள் இருக்கிறார்கள் அப்படி ஒரே பெயரைக் கொண்டவர்கள். ஒரே தொகுதியில் களமிறக்கப்படக்கூடாது என சொல்ல முடியாது ஆனால் வாக்காளர்களை குழப்புவதற்காக இப்படியான செயல்கள் பல இடங்களில் நடக்கின்றது அதை தடுப்பதற்காக வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளரின் வண்ண புகைப்படம் இடம் பெற்றுள்ளது. மேலும், சின்னங்களும் தெளிவாக அச்சிடப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
