சென்னை: தமிழகத்தில் இயங்கும் டாஸ்மாக் கடைகளில் மேலும் 54 நிறுவனங்களின் மதுபான வகைகளை அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது. இந்த செய்திகள் அதிர்ச்சியளிக்கிறது என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில் டாஸ்மாக் கடைகளை மூடுகிறோம்” என பக்கத்திற்கு பக்கம் சுய விளம்பரம் செய்து கொண்டிருக்கும், முதல்வர் ஜோசப் விஜய் அவர்கள் தலைமையிலான அரசு, பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுவதை வெளிப்படுத்தும் வகையில் புதிய மதுபான வகைகளை அறிமுகப்படுத்த உள்ளது குறித்து செய்தி வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைகள் என தமிழகத்தில் நாளுக்கு நாள் பெருகி வரும் குற்றங்களின் பின்னணியில், பெரும்பாலும் போதைப் பழக்கமே ஒளிந்திருக்கையில், மது உள்ளிட்ட போதைப் பொருட்களைக் கட்டுப்படுத்துவது தான் ஒரு நல்ல அரசுக்கு அழகு. அதை விட்டு விட்டு, மதுபான வகைகளைக் கூட்டி, மக்களை போதைக்கு அடிமையாக்குவது அல்ல. எப்போவாவது வெளியூர்களுக்கு டூர் சென்றால் மட்டும் தான் குறிப்பிட்ட வகை மதுபானம் கிடைக்கும் என்றிருக்கும் நிலையை மாற்றி, கைக்கு எட்டும் தூரத்திலேயே எல்லா வகை மதுபானங்களையும் கொண்டு வருவது, இளைஞர்களிடையே குடிப்பழக்கத்தை அதிகரிக்கும். “More Choices, More chances” என்பதை ஆளும் அரசு உணர வேண்டும்.
எனவே அதிகளவிலான மதுபானங்களை டாஸ்மாக் கடைகளில் அறிமுகம் செய்யும் திட்டம் ஒருவேளை ஆளும் அரசிடம் இருந்தால் அதை உடனடியாகக் கைவிட வேண்டும்! முடிந்தவரையில் டாஸ்மாக் கடைகளைக் குறைத்து தமிழகத்தில் மதுவிற்கு அடிமையானவர்களின் எண்ணிக்கையை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்று கூறி உள்ளார்.
