முத்துப்பேட்டை, ஜூலை 17: முத்துப்பேட்டை அருகே காவல்துறை சார்பில் போதை பொருள் ஒழிப்பு குறித்து மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த நாச்சிகுளம் பகுதியில் காவல்துறை மற்றும் மாணவர்கள் சார்பில் போதைப் பொருள் ஒழிப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளி மாணவர்களின் பேரணி நேற்று நடைபெற்றது. பேரணியை முத்துப்பேட்டை டிஎஸ்பி ராஜு தொடங்கி வைத்தார். இந்த விழிப்புணர்வு பேரணியில் மாணவர்கள் போதைப் பொருள்களால் ஏற்படும் தீமைகள் குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு மாணவர்கள் முழக்கங்களை எழுப்பியவாறு நாச்சிகுளம் கடைவீதி உதயமார்த்தாண்டபுரம் கடைவீதி வழியாக பேரணியாக சென்று மீண்டும் வந்தடைந்தனர். இந்த விழிப்புணர்வு பேரணியில் உதவி ஆய்வாளர் ராகுல் மற்றும் காவல்துறையினர், ஆசிரியர்கள், மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
