- தமிழ்நாடு வேளாண்மை தொழிலாளர்
- டெல்டா மாவட்டங்கள்
- திருத்துறைப்பூண்டி
- நிலை
- பொதுச்செயலர்
- பாஸ்கர்
- தமிழ்நாடு அரசு
- பசிபிக்…
திருத்துறைப்பூண்டி, ஜூலை 17: டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த பகுதியாக அறிவித்து நிவாரண உதவிகள் வழங்க வேண்டும் என தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பாஸ்கர் தமிழக அரசுக்குகோரிக்கை மனு அனுப்பி உள்ளார். அதில் கூறியதாவது, பசிபிக் பெருங்கடலில் ஏற்படும் வெப்பநிலை மாற்றத்தின் (எல்நினோ) தாக்கம் தமிழ்நாட்டிலும் கடுமையாக இருக்கும் என ஆய்வறிக்கைகள் தெரிவித்து வருகின்றன பல மாவட்டங்களில் வெப்பநிலை வழக்கத்தை விட அதிகமாக இருந்து வருகிறது.தமிழ்நாடு முழுவதும் வறட்சி நிலையை நோக்கி நகர்ந்து வருகிறது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்கு ஆண்டுதோறும் ஜூன் 12 மேட்டூர் அணை திறந்து விடப்படும்.
நடப்பாண்டில் மேட்டூர் அணையில் போதிய தண்ணீர் இல்லாததால் இதுவரை அணை திறப்புக்கான அறிவிப்பு வெளி வரவில்லை. இந்த நிலையில் தமிழ்நாடு அரசு குறுவை சாகுபடிக்கான சிறப்புத் தொகுப்பு திட்டத்தை அறிவித்தது. எனினும் கடந்த ஆண்டு 6 லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி செய்திருந்த நிலையில் நடப்பாண்டில் 1.5 லட்சம் ஏக்கரில் மட்டுமே குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மழையை எதிர்பார்த்து ஏக்கருக்கு ரூ.1500 செலவு செய்து, உழவு செய்து வைத்த விவசாயிகள் இழப்புக்கு ஆளாகியுள்ளனர். கடுமையான வறட்சியால் குடிதண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குடிநீர் கேட்டும் பொது மக்கள் போராடி வருகின்றனர்.
காவிரி நதிநீர் பகிர்வுக்கான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புப் படி, தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு வழங்க மறுத்து வருகிறது. இந்த நிலையில் டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த பகுதியாக அறிவித்து,
விவசாயிகள், விவசாயத் தொழிலாளர் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளையும் ஊராட்சி நிருவகத்தின் மூலம் குடிநீர் வழங்க வேண்டும் என தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொள்கிறது.
