தஞ்சாவூர், ஜூலை 17: தஞ்சை பழைய பஸ் நிலையம் அண்ணா சிலை பகுதியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் அமைக்கப்பட்ட ரவுண்டானாவால் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே அந்த பகுதியில் உள்ள ரவுண்டானவை அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சை மாநகரில் பல்வேறு இடங்களில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக தஞ்சை ஆற்றுப்பாலம் அண்ணாசிலை, தொம்பன் குடிசை, பெரிய கோவில் பகுதி, ராமநாதன் ரவுண்டானா, மேரீஸ் கார்னர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
இதில் ஒரு பகுதியாக தொம்பன்குடிசை பகுதியிலும், தஞ்சை ஆற்றுப்பாலம் பகுதியிலும் ரவுண்டானா அமைக்கப்பட்டு போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வுகாணப்பட்டுள்ளது. இந்தப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வண்ணம் வாகனங்களும் ரவுண்டானாவை சுற்றி சென்ற வண்ணம் உள்ளன. இதேபோல் தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே அண்ணா சிலை அமைந்துள்ள பகுதிகளில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இந்தப் பகுதியில் எட்டு சாலைகள் சந்திக்கும் இடம் உள்ளது. மேலும் இந்த பகுதியில் போக்குவரத்து சிக்னலும் உள்ளன. ஆனால் அது செயல்படுவதில்லை. பழைய பஸ் நிலையம் பகுதி 24 மணி நேரமும் போக்குவரத்து நிறைந்த பகுதியாகும்.
இந்த பகுதியில் அடிக்கடி போக்குவரது நெரிசல் ஏற்படுவது வழக்கம். இதையடுத்து இந்த பகுதியில் ரவுண்டானா அமைத்து போக்குவரத்தை சீரமைக்க மாவட்ட நிர்வாகம், தஞ்சை மாநகராட்சி, நெடுஞ்சாலைத்துறை, போலீசார் முடிவு செய்தனர்.
இதையடுத்து அண்ணா சிலை பகுதியில் ரவுண்டானா கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமைக்கப்பட்டது. அந்த ரவுண்டானா அண்ணா சிலையின் பின்பகுதியை ஒட்டியவாறு சுற்றிலும் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்தப் பகுதியில் அதிகளவில் இருசக்கர வாகனங்கள் நான்கு சக்கர வாகனங்கள் சென்று வருவதால் மாலை நேரங்களில் அந்தப் பகுதி முழுவதும் ரவுண்டானாவால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் இடையே தகராறு ஏற்படுகிறது. எனவே அந்த ரவுண்டானா பகுதியில் உள்ள அண்ணா சிலையை அருகே உள்ள கலைஞர் சிலையுடன் இணைத்து வைத்தால் அந்த ரவுண்டானாவை சிறிய அளவில் அமைத்து போக்குவரத்து நெரிசலை குறைக்கலாம்.
அல்லது அந்த ரவுண்டானாவை அகற்றிவிட்டு முன்பு இருந்தது போல் அமைத்தால் போக்குவரத்து நெரிசல் அதிக அளவில் குறைந்து வாகனங்களும் நெரிசலில் சிக்காமல் சென்று வரும். எனவே மாவட்ட நிர்வாகம் இது குறித்து தகுந்த நடவடிக்கைகளை எடுத்து ரவுண்டானாவை அகற்றுவது அல்லது ரவுண்டானாவின் அளவை குறைப்பது போன்ற செயலில் ஈடுபட வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
