திருச்செங்கோடு அருகே சாலையோரங்களில் ஊர் பெயர் பலகைகள் சேதம்: சீரமைக்க கோரிக்கை

திருச்செங்கோடு, ஜூலை 14: திருச்செங்கோடு அருகே, குமாரமங்கலம் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஆத்தூர் மல்லிகரை வரை, இரு வழிச்சாலையாக கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு, இரு புறங்களிலும் சாலைகளை அகலப்படுத்தி, நிழல்கூடங்கள் என பல்வேறு பாதுகாப்புகளுடன் சாலைகளை உயரப்படுத்தி புதிய சாலை வசதிகள் அமைக்கப்பட்டது. ஈரோடு -திருச்செங்கோட்டில் இருந்து கள்ளக்குறிச்சி, விழுப்புரம், பாண்டிச்சேரி, சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களுக்கு சேலம் வழியாக செல்வது வழக்கமாக இருந்து வந்தது. இந்த சாலை புதுப்பித்த பின், சுமார் 30 கிமீ தூரம் மிச்சம் ஆவதால், குமரமங்கலம், எலச்சிபாளையம், வைப்பமலை, குருசாமிபாளையம், ராசிபுரம் ஆகிய பகுதி வழியாக ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.

5 வருடங்களுக்கு தனியார் நிறுவனத்தின் மூலம், பராமரிப்பு பணிகள் செய்வது என முடிவின் அடிப்படையில், அவர்களுக்கான காலம் முடிந்து ஓராண்டுகளுக்கு மேலாகிவிட்டது. இந்நிலையில், கடந்த ஒரு மாதமாக சாலைகளின் இருபுறங்களில் உள்ள, ஒளிரும் வழிகாட்டி போர்டுகள் சேதம் அடைந்து கீழே விழுந்துள்ளது. குறிப்பாக எலிமேடு, செட்டிகுட்டைமேடு கொன்னையாறு, வையப்பமலை பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சேதம் அடைந்து கீழே விழுந்து காணப்படுகிறது. இதில் வெளியூர் பயணிகள் மற்றும் பொதுமக்கள் செல்லும் பொழுது, குறிப்பாக இரவு நேரங்களில் உரிய பகுதிகளுக்கு செல்ல முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே, சேதம் அடைந்த வழிகாட்டி பலகைகளை உடனடியாக சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: