காமராஜர் பிறந்தநாள் விழாவினையொட்டி சிறப்பு ரத்த தான முகாம்

தேனி, ஜூலை 17: தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை சார்பில், முன்னாள் முதல்வர் காமராஜரின் 124வது பிறந்த நாள்விழா நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி தேனி அருகே முத்துத்தேவன்பட்டியில் உள்ள நாடார் உறவின்முறை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட அளவிலான மகளிர் கூடைப்பந்து போட்டி நந்தது. இதில் நாடார் உறவின்முறைக்குட்பட்ட பள்ளிகள், கல்லூரிகளில் இருந்து மாணவிகள் கலந்து கொண்டனர்.

தேனி நாடார் சரசுவதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் நாடார் சரசுவதி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ரத்த தான முகாம் நடந்தது. இதனை மாவட்ட கலெக்டர் வைத்திநாதன் துவக்கி வைத்தார். இதில் 657 பேர் கலந்து கொண்டு ரத்த தானம் வழங்கினர். இதனையடுத்து, நாடார் சரசுவதி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஆண்களுக்கான கூடைப்பந்து போட்டி, மினி மாரத்தான் போட்டிகள் நடந்தது.தேனி நாடார் சரசுவதி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இருந்து துவக்கப்பட்ட மினி மாரத்தான் போட்டியில் 2 ஆயிரத்து 357 மாணவ, மாணவி கலந்து கொண்டு ஓடினர். இந்த போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதனைத்தொடர்ந்து தேனி நகரில் காமராஜர் சாதனை ஊர்தி அணிவகுப்பு பேரணி நடத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சிகளில் தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை தலைவர் தர்மராஜன், உபதலைவர் ஜீவகன், பொதுச் செயலாளர் எம்.எம்.ஆனந்தவேல், பொருளாளர் ராமச்சந்திரன், உறவின்முறை ஆட்சிமன்றக் குழு உறுப்பினர்கள், பள்ளி கல்லூரிகளின் நிர்வாகிகள், பள்ளி, கல்லூரிகளின் ஆசிரிய, ஆசிரியைகள், பள்ளி-கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் ஆட்சி மன்றக் குழு உறுப்பினர் விஜய் நன்றி கூறினார்.

Related Stories: