×

மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் இன்று தொடக்கம்: ஆன்லைனில் சுயமாக பதிவேற்றலாம்

மதுரை, ஜூலை 17: மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி இன்று (ஜூலை 17) முதல் துவங்கும் நிலையில், ஆன்லைனில் சுய கணக்கெடுப்பிலும் பொதுமக்கள் பங்கேற்கலாம் என கலெக்டர் கூறியுள்ளார்.இதுகுறித்து மாவட்ட கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா வெளியிட்டுள்ள அறிக்கை: மதுரை மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு-2027 நடத்தப்பட உள்ளது. இக்கணக்கெடுப்பின் அடிப்படையில் எதிர்கால திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படும் என்பதால், இப்பணி மிகவும் முக்கியத்துவமானது. இப்பணி முதற்கட்டமாக வீடுகள் கணக்கெடுப்பு நடைபெற உள்ளது. மேலும் முதற்கட்ட பணியாக, பொதுமக்கள் தங்களது விபரங்களை https://se.census.gov.in/ என்ற இணையதள முகவரியில் பதிவு செய்யும் சுய கணக்கெடுப்பு ஜூலை 17 முதல் 31 வரை நடைபெற உள்ளது.

ஒரு குடும்பத்திற்கு ஒரு கைபேசி எண் வாயிலாக இந்த தகவல்களை பதிவேற்றலாம். மக்கள் தொகை கணக்கெடுப்பு இணைய தளத்திற்குள், மாநிலம் என்ற பகுதியில் தமிழ்நாடு என தேர்வு செய்து கேப்சா குறியீடு வழங்கியவுடன் தொலைபேசி எண்ணிற்கு ஓடிபி வரும். அதனை தொடர்ந்து மொத்தம் 33 கேள்விகள் கேட்கப்படும். 1 முதல் 7 கேள்விகள் கட்டிடம் மற்றும் வீட்டு விபரம் தொடர்பானது. 8 முதல் 15 கேள்விகள் குடும்ப விபரம் தொடர்பானது. 16 முதல் 24 வரையிலான கேள்விகள் வீட்டு வசதிகள் மற்றும் அடிப்படை சேவைகள் தொடர்பானது. 25 முதல் 33 வரையிலான கேள்விகள் குடும்ப சொத்து, உணவுமுறை, டிஜிட்டல் வசதி தொடர்பானது.

இதன்படி 33 கேள்விகளுக்குமான பதில்களை பூர்த்தி செய்ய வேண்டும். இதற்கு 15 முதல் 20 நிமிடங்களில் பதிலளிக்க வேண்டும். பின்னர் ஓகே பட்டனை அழுத்தி, சுய கணக்கெடுப்பு நிறைவு செய்தால் 12 இலக்க அடையாள எண் கைபேசிக்கு குறுஞ்செய்தியாக வரும். அதனை பாதுகாப்பாக வைத்திருந்து, தங்கள் பகுதிக்கு கணக்கெடுப்பாளர் வரும்போது, தெரிவிக்க வேண்டும். மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி முழுவதும் டிஜிட்டல் முறையில் நடைபெறுவதால், அனைவரும் சுய கணக்கெடுப்பில் பங்கேற்று, எதிர்கால திட்டப் பணிகள் மற்றும் இதர அரசு திட்டங்கள் மேற்கொள்வதில் தங்களை இணைத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

Tags : Madurai ,District Collector ,Nishant Krishna ,
× RELATED அரசினர் பாதுகாப்பு இடம், சிறார்...