ஆந்திர கடல் எல்லையில் தமிழக மீனவர்கள் தொடர்ந்து மீன் பிடிக்க அனுமதிக்க வேண்டும் – தமிழ்நாடு அரசு கோரிக்கை

சென்னை: ஆந்திர கடல் எல்லையில் தமிழக மீனவர்கள் தொடர்ந்து மீன் பிடிக்க அனுமதிக்க வேண்டும் என்று ஆந்திர அரசிடம், தமிழக அரசு சார்பில் அதிகாரப்பூர்வமாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அண்மையில் ஆந்திர அரசு கொண்டு வந்துள்ள புதிய கடல்சார் கட்டுப்பாடுகள் மற்றும் எல்லைப் பிரச்சனைகள் காரணமாக இரு மாநில மீனவர்களிடையே பதற்றம் நிலவி வரும் சூழலில் இந்த கோரிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

சமீபத்தில் ஆந்திர அரசானது, ஆந்திர கரையோரத்திலிருந்து 12 கடல் மைல் தொலைவிற்குள் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்கக் கூடாது என்று தடை கொண்டு வந்துள்ளது. இந்த தடையை உடனடியாக கைவிட வேண்டும் என ஆந்திர அரசை, தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது. சில நாட்களுக்கு முன்னர் நெல்லூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த இரு மாநில மாவட்ட அளவிலான ஆலோசனைக் கூட்டத்தில் ஆந்திர அரசு தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், இன்று (ஜூலை 16) தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் ஆந்திர அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு மேற்கண்ட கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

மீன்பிடி தடைக்காலம் முடிந்து சென்னை காசிமேடு, திருவள்ளூர் உள்ளிட்ட பகுதி மீனவர்கள் கடலுக்குச் சென்றுள்ள நிலையில், தங்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க ஆந்திர அரசுடன் சுமுகமான உடன்பாட்டை எட்ட வேண்டும் என தமிழக மீனவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

 

Related Stories: