புதுடெல்லி: காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் தள பதிவில்,‘‘மோடி அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளால் நாடு படிப்படியாக பொருளாதார நெருக்கடியை நோக்கிச் செல்கிறது. கடந்த சில மாதங்களாகவே காங்கிரஸ் கட்சி, இது குறித்து அரசை எச்சரித்து வருகின்றது.
கடந்த 44 மாதங்களில் இல்லாத அளவிலான அதிகபட்ச மொத்த விற்பனை விலை பணவீக்கம் மற்றும் எரிபொருள், மின்சார கட்டணம் 27.4 சதவீதம் என்ற அதிர்ச்சியூட்டும் உயர்வு ஆகியவற்றுக்கு மத்தியில் விவசாய விதைப்பு பணிகள் கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது. பணவீக்க உயர்வு தொழில்துறைகளின் செயல்பாட்டுக் செலவுகளை அதிகரித்துள்ளது.
முக்கிய பொருளாதாரக் குறியீடுகள் அனைத்தும் எச்சரிக்கை விடுத்துக்கொண்டிருக்கும் நிலையில் நிலைமையை சரிசெய்வதற்கு பதிலாக பொதுமக்களின் கவனத்தை திசைதிருப்பும் வகையில் செய்திகளில் இடம்பிடிப்பதிலேயே மோடி அரசு மும்முரமாக இருக்கிறது- பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு பதிலாக ஆபத்தான நிலையில் உள்ள பணவீக்க புள்ளி விவரங்களை மறைக்கவே அரசு முயற்சிக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
