ஜம்மு: தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்பான லஷ்கர் இ தொய்பா நிறுவனர் ஹபீஸ் சயீத் மீது சிறப்பு என்ஐஏ நீதிமன்றம் ஜாமீனில் வெளிவரமுடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு தெற்கு காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலாப்பயணிகள். இந்த தீவிரவாத தாக்குதல் தொடர்பாக ஜம்முவில் உள்ள சிறப்பு என்ஐஏ நீதிமன்றத்தில் கூடுதல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இதில் லஷ்கர் இ தொய்பா மற்றும் அதன் பினாமி அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் ப்ரண்ட் ஆகியவற்றின் தலைவரான ஹபீஸ் சயீத் மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளது. சர்கோதாவை சேர்ந்தவரும் தலைமறைவாக உள்ள தீவிரவாதியுமான ஹபீஸ் சயீத் பஹல்காம் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு வேண்டுமென்றே கைது நடவடிக்கையில் இருந்து தப்பித்து வருவதாகவும் என்ஐஏ நீதிமன்றத்திடம் தெரிவித்தது. இதனைத்தொடர்ந்து எதிர்கால விசாரணையின்போது அவர் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு ஏதுவாக அவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவரமுடியாது பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
