டெல்டா மாவட்டங்களில் மூடப்பட்ட மணல் குவாரிகளை மீண்டும் திறக்க முடிவு.! விவசாயிகள் அதிர்ச்சி

தஞ்சை: அமலாக்க துறை சோதனையை தொடர்ந்து சுமார் இரண்டரை ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் மூடப்பட்ட 12 ஆற்று மணல் குவாரிகளை மீண்டும் திறக்க தவெக அரசு முடிவு செய்துள்ளது. இந்த தகவல் டெல்டா மாவட்ட விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஏனென்றால் 12 ஆற்று மணல் குவாரிகளில் பெரும்பாலானவை தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி போன்ற டெல்டா மாவட்டங்களின் ஆற்றுப்படுகைகளிலும், சில குவாரிகள் அண்டை மாவட்டங்களின் ஆற்றுப்படுகைகளிலும் உள்ளன.

அமலாக்கத்துறை சோதனைகளால் கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக மூடப்பட்டிருந்த இந்தக் குவாரிகளை, கடுமையான மணல் தட்டுப்பாடு மற்றும் கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

முன்னதாக கடந்த 2023 செப்டம்பர் மாதத்தில் சட்டவிரோதமாக மணல் எடுத்தல் மற்றும் வரி ஏய்ப்பு புகார்களின் பேரில் அமலாக்கத்துறை (ED) நடத்திய அதிரடிச் சோதனையை அடுத்து, குறிப்பிட்ட 12 ஆற்று மணல் குவாரிகளும் முடக்கப்பட்டன. இந்த நிலையில் தற்போது நிலவும் கட்டுமானப் பொருட்கள் தட்டுப்பாட்டைப் போக்கவும், சட்டவிரோத மணல் கடத்தலைத் தடுக்கவும், இந்த 12 குவாரிகளை மீண்டும் திறந்து செயல்பாட்டிற்கு கொண்டு வரும் முடிவை தவெக அரசு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

தற்போதைய அரசு திட்டமிட்டுள்ளபடி காவிரியின் டெல்டா ஆற்றுப் படுகைகளில் மூடப்பட்ட மணல் குவாரிகள் மீண்டும் திறக்கப்பட்டால், நிலத்தடி நீர்மட்டம் கடுமையாகப் பாதிக்கப்படும் என டெல்டா பகுதி விவசாயிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளதோடு, தங்களது கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.

Related Stories: