×

லிப்ட்டுக்கே பொறுக்காத ரீல்ஸ் அட்ராசிட்டி சிக்கிய தவெகவினர் எஸ்கேப்பான அமைச்சர்: ஒரு மணி நேரம் போராடி மீட்பு

கோபி: கோபி நாய்க்கன்காடு பகுதியில் பெருந்துறையை அடுத்த நல்லாம்பட்டி ஊஞ்சப்பாளையத்தை சேர்ந்த குணசேகர் (30), என்பவர் நேற்று உடற்பயிற்சி மையத்தை (ஜிம்) திறந்தார். இந்நிகழ்ச்சியில் வருவாய்த்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் தவெகவினர், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். அமைச்சருடன் ரீல்ஸ் எடுப்பதற்காக தவெகவினர் முண்டியடித்தபடி லிப்டில் மாடிக்கு செல்ல முயன்றனர்.

5 பேர் மட்டுமே செல்லக் கூடிய லிப்ட்டில் பத்துக்கும் மேற்பட்ட தவெகவினர் ஏறியதால் லிப்ட் பழுதாகி பாதியில் நின்றது. மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில், லிப்ட்டில் பொருத்தப்பட்டு இருந்த மின்விளக்குகள், மின் விசிறி பழுதடைந்தது. உள்ளே சிக்கி இருந்த 12 பேருக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயக்கமடையும் நிலை ஏற்பட்டது. அப்போது அதில் ஒருவர் உடனடியாக தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தார்.

விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் லிப்ட்டை, கடப்பாரை, மற்றும் இயந்திரம் மூலம் சுமார் ஒரு மணி நேரம் போராடி கதவை உடைத்து உள்ளே சிக்கி இருந்த டி.என்.பாளையத்தை சேர்ந்த ஆறுமுகம் (60), மோகன்குமார் (60), சுரேந்தர்பாபு (35), சுரேஷ் (42), கார்த்திகேயன் (41), கொண்டையம் பாளையத்தை சேர்ந்த மூர்த்தி (48), கார்த்தி (32), திங்களூரை சேர்ந்த விஜய் (24), ஹரிதாஸ் (27), அருண் (25), கவின் (26) கள்ளியங்காட்டை சேர்ந்த சக்திவேல் (55)ஆகிய 12 பேரையும் மீட்டனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் அமைச்சரை பார்ப்பதற்காகவும், அவருடன் ரீல்ஸ் எடுக்கும் ஆர்வத்தில் லிப்ட்டில் அதிகம் பேர் ஏறியதாலேயே லிப்ட் பழுதடைந்து இருப்பது தெரியவந்தது. தவெகவினர் லிப்ட்டில் சிக்கி தவித்தபோதும் கண்டுகொள்ளாமல் அமைச்சர் ஜிம்மை திறந்து வைத்துவிட்டு டாட்டா காண்பித்து காரில் ஏறி பறந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அமைச்சர், எம்எல்ஏக்கள் எங்கு போனாலும் தவெகவினர் ரீல்ஸ் செய்வதால், லிப்ட்டுக்கே பொறுக்காமல் இப்படி சிக்கிவிட்டனர் என நெட்டிசனக்ள் கலாய்த்து வருகின்றனர்.

Tags : Gopi ,Gunasekar ,Nallampatti Oonjapalayam ,Perundurai ,Gopi Naikkankadu ,Revenue Minister ,K.A. Sengottaiyan ,
× RELATED நீட் சர்ச்சைக்கு நடுவே அடுத்த...