சேலம்: ஒரிஜினல் களவாணி தவெக தான் என்றும், திமுக கூட்டணி கட்சிகளின் தயவால் தான் விஜய் ஆட்சி நடத்துகிறார். அவர்கள் காலை வாரினால் இந்த ஆட்சி கவிழ்ந்து விடும். கரூர் வழக்கில் சிபிஐ ஒருவரை தூக்கினால் தவெக ஆட்டம் கண்டுவிடும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்து உள்ளார். சேலம் மாநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், சேலம் சூரமங்கலத்தில் உள்ள மாநகர் மாவட்ட கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்தில், கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசியதாவது:
தேர்தலில் வெற்றி, தோல்வி என்பது மாறி, மாறி வரும். அதிமுக வெற்றியை கண்டு தலைகால் புரியாமல் ஆடுவதோ, தோல்வியை கண்டு துவண்டு போவதோ கிடையாது. அரசியல் சூழ்நிலைக்கு ஏற்ப, கூட்டணி கட்சிகள் மாறுவது இயல்பு. ஒரு கட்சி ஆரம்பித்து 2 ஆண்டுகள் மட்டுமே ஆன நிலையில், வெற்றி வாய்ப்பு கிடைத்தது. அவர்கள் உழைத்து, வேலை செய்து வரவில்லை.
அண்ணா, எம்ஜிஆர் என நமது தலைவர்களின் படங்களை காட்டி வெற்றி பெற்றுள்ளதால், அதை உண்மையான வெற்றியாக கருத முடியாது. ரீல்ஸ், ரீல் மட்டுமே செய்து தவெக தலைவர் விஜய் ஆட்சிக்கு வந்துள்ளார். அவர் சினிமாவில் பேசியது போல், முதல்வர் ஆகியும் வசனம் பேசுகிறார். தமிழகம் முழுவதும் கஞ்சா, போதை கலாச்சாரம் தலை விரித்து ஆடுகிறது. பாலியல், கொலை, கொள்ளை என சட்டவிரோத செயல்கள் அதிகரித்து விட்டன.
தவெக ஆட்சியில் சிங்கப்பெண் சிறப்பு படை தொடங்கினார்கள்.
அந்த திட்டமும் கூட ரீல்சாக தான் இருந்ததே தவிர ரியலாக இல்லை. இரவு நேரத்தில் சிங்கப்பெண் சிறப்பு படையை, இன்னொரு தனிப்படை அமைத்து பாதுகாக்க வேண்டும். குழந்தைகள், இளைஞர்களை மூளைச்சலவை செய்து, தவெகவினர் வாக்கு சேகரித்துள்ளனர். இது உண்மையான வெற்றி கிடையாது. குரங்கு கையில் கிடைத்த பூமாலை போல் சிக்கி தவிக்கும் ஆட்சியாகவும், அலங்கோல ஆட்சியாகவும் இருக்கிறது. கரூர் நிகழ்ச்சியில் முதல்வர் விஜய் பேசும்போது, திமுக-அதிமுக கூட்டு களவாணிகள் என்று கூறியுள்ளார்.
ஒரிஜினல் களவாணி தவெக தான். சட்டமன்ற தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நமது கட்சி எம்எல்ஏக்களை, விஜய் தான் களவாடுகிறார். ஒன்றிய அரசை பற்றி இவர்களுக்கு தெரியாது. கரூர் சம்பவத்தில், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, சிபிஐ விசாரணை 2 போலீஸ் ஐஜிக்கள் தலைமையில் நடந்து வருகிறது. இந்த சம்பவத்தில் தவெக ஆட்சியை விளையாட விட்டு, ஒன்றிய அரசு வேடிக்கை பார்க்கிறது.
இந்த வழக்கில் யாராவது ஒருவரை தூக்கினால், தவெக தானாக ஆட்டம் கண்டு விடும். சிவசேனா, மம்தா பானர்ஜி ஆகியோரின் நிலைமை தற்போது எப்படி இருக்கிறது? என்பது அனைவருக்கும் தெரியும். இங்கிருந்து தவெகவுக்கு போனவர்கள் மீதும் வழக்கு உள்ளது. அவர்கள் அங்கிருந்து மீண்டும் வந்தால் ஜீரோவில் இருந்து தான் ஆரம்பிக்க வேண்டும். அதிமுகவில் அவர்களுக்கு எவ்வளவு கவுரவம் கொடுக்கப்பட்டது?. ஆனால் அங்கு சென்ற அதிமுகவினரின் நிலை கேவலமாக உள்ளது. வெளியே நிற்க வேண்டிய சூழ்நிலையை எதிர் கொண்டுள்ளனர்.
கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவத்தில், பாதிக்கப்பட்டவர்களை பார்க்காமல் சென்னைக்கு ஓட்டம் பிடித்தது யார்?. அந்த சம்பவத்திற்கு பிறகு 15 நாட்கள் தவெக அலுவலகத்தை மூடி விட்டார்கள். அக்கட்சி தலைவர் விஜய், 72 நாட்கள் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. அப்போது, கரூரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு யார் ஆறுதல் கூறி, ஓடோடி உதவி செய்தார்கள் என்று மக்களுக்கு நன்றாக தெரியும்.
தேர்தலில் வெற்றி பெற மாட்டோம் என நினைத்து, ஏராளமான வாக்குறுதிகளை விஜய் அள்ளி வீசினார். தற்போது நிதியில்லாமல் விழி பிதுங்கி நிற்கிறார். தவெக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வரவில்லை. திமுக கூட்டணி கட்சிகளின் உதவியுடன் ஆட்சி நடந்து வருகிறது. அவர்கள் எப்போது வேண்டுமானாலும் காலை வாரி விடுவார்கள். அப்போது இந்த ஆட்சி கவிழ்ந்து விடும். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.
* மேக்கப்மேனுக்கும் பதவி கொடுப்பாங்க….
‘‘ஜனநாயகன் படத்தயாரிப்பாளருக்கு டெல்லி சிறப்பு பிரதிநிதியாகவும், அவரது ஆலோசகருக்கு தமிழ்நாடு அரசின் ஆலோசகராகவும் பதவி வழங்கப்பட்டுள்ளது. சொல்ல போனால் முதல்வருக்கு மேக்கப் போடும் நபருக்கும் வரும் நாட்களில் பதவி கொடுப்பார்கள்’’ என்று எடப்பாடி பழனிசாமி கிண்டலாக தெரிவித்தார்.
* தவெக ஆட்சியில் சிங்கப்பெண் சிறப்பு படை தொடங்கினார்கள். அந்த திட்டமும் கூட ரீல்சாக தான் இருந்ததே தவிர ரியலாக இல்லை.
* குரங்கு கையில் கிடைத்த பூமாலை போல் சிக்கி தவிக்கும் ஆட்சியாகவும், அலங்கோல ஆட்சியாகவும் இருக்கிறது.
* தவெக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வரவில்லை. திமுக கூட்டணி கட்சிகளின் உதவியுடன் ஆட்சி நடந்து வருகிறது.
* அதிமுகவில் இருந்து தவெகவுக்கு போனவர்கள் மீதும் வழக்கு உள்ளது. அவர்கள் அங்கிருந்து மீண்டும் வந்தால் ஜீரோவில் இருந்து தான் ஆரம்பிக்க வேண்டும்.
