×

காவிரி டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவித்து உடனடி நிவாரணம்: ஜவாஹிருல்லா வலியுறுத்தல்

சென்னை:மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா இன்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தின் நெற்களஞ்சியமாக விளங்கும் காவிரி டெல்டா மாவட்டங்கள் இன்று கடுமையான வேளாண் நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றன. தென்மேற்கு பருவமழை பொய்த்ததுடன், காவிரி நீர் உரிய அளவில் தமிழகத்திற்கு கிடைக்காததால் குறுவை சாகுபடி பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் கடுமையான வாழ்வாதார நெருக்கடியில் சிக்கியுள்ளனர்.

வழக்கமாக ஜூன் 12ம் தேதி திறக்கப்படும் மேட்டூர் அணை, போதிய நீரிருப்பு இல்லாத காரணத்தால் திறக்கப்படாதது டெல்டா விவசாயத்திற்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. காவிரி நீர்வழங்கல் தொடர்பாக நடுவர் மன்றமும் உச்சநீதிமன்றமும் நிர்ணயித்துள்ள அளவிற்கு கர்நாடக அரசு நீரை திறந்துவிடாததால் தமிழக விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். கடந்த ஆண்டு ஆறு லட்சம் ஏக்கருக்கும் அதிகமாக நடைபெற்ற குறுவை சாகுபடி, இந்த ஆண்டு கடுமையாக குறைந்துள்ளது.

நிலத்தடி நீரை நம்பி சாகுபடி மேற்கொண்டுள்ள விவசாயிகளும் மின்வெட்டு, குறைந்த மின்னழுத்தம், நிலத்தடி நீர்மட்ட சரிவு போன்ற காரணங்களால் கடுமையான சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். குறுவை சாகுபடி நடைபெறாததால் விவசாயத் தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கிராமப்புற பொருளாதாரமே கடுமையாக பாதிக்கப்பட்டு, விவசாயத் தொழிலாளர்கள் வேறு வேலைகளை தேடி இடம்பெயர வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.

விவசாயிகள் மட்டுமல்லாமல் கால்நடை வளர்ப்போரும் தீவனப் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு உடனடியாக காவிரி டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவிக்க வேண்டும். குறுவை சாகுபடி செய்ய முடியாமல் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் ஏக்கருக்கு ரூ.15,000 வீதம் வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும். நீண்டகாலமாக காத்திருக்கும் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகள் வழங்கப்பட வேண்டும்.

Tags : Cauvery Delta districts ,Jawahirullah ,Chennai ,Humanity ,Makkal Katchi ,M.H. Jawahirullah ,Tamil Nadu ,Cauvery ,Kuruvai… ,
× RELATED நீட் சர்ச்சைக்கு நடுவே அடுத்த...