சென்னை: நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை, கடந்த 3 நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது. என்இசிசி மண்டல தலைவர் சிங்கராஜ், நேற்று முட்டை விலையில் மேலும் 5 காசுகள் உயர்த்தினார். இதையடுத்து ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 665 காசாக உயர்ந்தது. நாடு முழுவதும் முட்டையின் தேவை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அனைத்து மண்டலங்களிலும் முட்டை விலை உயர்த்தப்பட்டு வருகிறது.
இதை பின்பற்றி நாமக்கல் மண்டலத்திலும் முட்டை விலை உயர்த்தப்பட்டுள்ளது. முட்டை விலை தொடர்ந்து வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருவதால், முட்டை வியாபாரிகள் மற்றும் கோழிப்பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கோழிப்பண்ணையாளர்கள் முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.7 வரை உயர வாயப்புள்ளதாக தெரிவித்தனர்.
