இசைக்குயில் எஸ்.ஜானகி மறைவு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்

சென்னை: இசைக்குயில் எஸ்.ஜானகி மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

வைகோ (மதிமுக பொதுச்செயலாளர்): தென்னிந்தியாவின் நைட்டிங்கேல் என்று அனைவராலும் பாராட்டிப் புகழப்பட்ட இசைக் குயில் ஜானகி அம்மையார் தன் 88வது வயதில் உடல்நலக் குறைவு காரணமாக மைசூர் மருத்துவமனையில் உயிரிழந்தார் என்ற செய்தி இடியென என்னை தாக்கிய நிலையில், நிலைகுலைந்து போய் துயரில் மூழ்கி உள்ளேன்.

1957ம் ஆண்டு விதியின் விளையாட்டு என்ற திரைப்படத்தில் முதன் முதலாக ஒலித்த ஜானகியின் குரல் 60 ஆண்டுகளாக தொடர்ந்து ஒலித்து நம் அனைவரையும் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கடித்தது. காதல், தாய்மை, அன்பு, தமிழ் மொழியின் சிறப்பு என பல்வேறு பண்பு நலன்களை வலியுறுத்தும் அவரது பாடல்கள் நெஞ்சம் மறக்காத தேனிசைப் பாடல்கள் ஆகும். அவரின் இனிமையான பாடல்கள் காருள்ள வரை, கடல் நீருள்ள வரை, இவ்வையகம் உள்ளவரை நம் செவிகளில் ஒலித்துக் கொண்டே இருக்கும்.

அன்புமணி (பாமக தலைவர்) : தென்னிந்தியாவின் நைட்டிங்கேல் என்று போற்றப்பட்ட பாடகி எஸ்.ஜானகி அம்மையார் முதுமை மற்றும் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். அவரது மறைவு இசை ரசிகர்கள் அனைவருக்கும் பேரிழப்பு.

மாணிக்கம் தாகூர் (காங்கிரஸ்) : நான்கு முறை சிறந்த பாடகிக்கான இந்திய தேசிய விருதுகளை வென்ற எஸ்.ஜானகி, பதினான்கு முறை கேரள மாநில அரசின் சிறந்த பாடகிக்கான விருதுகளையும், ஏழு முறை தமிழ்நாடு அரசின் சிறந்த பாடகிக்கான விருதுகளையும், பத்து முறை ஆந்திர மாநில அரசின் சிறந்த பாடகிக்கான விருதுகளையும் குவித்தவர்.

ஓர் இசையமைப்பாளராகவும், பாடலாசிரியராகவும்கூட தன்னை வெளிப்படுத்தியிருக்கும் எஸ்.ஜானகி, குழந்தைக் குரலிலும், ஆண் குரலிலும் பாடும் தனித் திறன் பெற்றவர். தென்னிந்திய இசையரசி என்று அழைக்கப்பட்ட அவரின் மறைவு ஒரு பேரிழப்பு. அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், கலைத் துறையினருக்கும் ஆழ்ந்த அனுதாபத்தையும் இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

Related Stories: