சென்னை: முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட லுக் அவுட் நோட்டீசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ஒருங்கிணைந்த சாலை உள்கட்டமைபு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சாலைகளை மேம்படுத்த தமிழக அரசு 5000 கோடி ரூபாயை ஒதுக்கியிருந்தது. இந்த திட்டத்தின் கீழ் பணிகள் ஏதும் மேற்கொள்ளப்படாமல் தனியார் நிறுவனங்களுக்கு தொகைகள் விடுவிக்கப்பட்டு, முறைகேடுகள் நடந்துள்ளதாக அறப்போர் இயக்கம் சார்பில் புகார் அளிக்கப்பட்டிருந்தது.
இந்த புகாரின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மற்றும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், ஒப்பந்ததாரர்களுக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி எ.வ.வேலு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதேபோல, சிகிச்சைக்காக அவர் வெளிநாடு சென்ற நிலையில், அவரை தேடப்படும் நபராக அறிவித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் லுக் அவுட் நோட்டீசும் பிறப்பித்துள்ளனர்.
இந்த லுக் அவுட் நோட்டீசை ரத்து செய்யக்கோரியும் எவ.வ.வேலு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனுக்கள் நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்த போது, முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் சித்தார்த் லுத்ரா, பி.வில்சன் ஆகியோர் ஆஜராகி, ஊழல் தடுப்புச் சட்டத்தில் சமீபத்தில் கொண்டு வரப்பட்ட திருத்தத்தின்படி அரசின் ஒப்புதல் பெறாமல் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முன் அனுமதியில்லாமல் எந்த விசாரணையும் நடத்த முடியாது.
கடந்த 2022ம் ஆண்டு புகார் தெரிவித்த நிலையில் நான்கு ஆண்டுகளுக்கு பின்னர், ஆட்சி மாற்றத்துக்கு பின்பு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சாலைகள் அமைக்கும் முன்பு பணத்தை விடுவித்ததற்காக அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு, தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. அரசுக்கு எந்த இழப்பும் ஏற்படவில்லை.லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைக்கு ஒத்துழைப்பு வழங்கிய நிலையில், லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மருத்துவ பரிசோதனைக்காக சிங்கப்பூர் சென்றுள்ள நிலையில் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 12ம் தேதி மனுதாரர் நாடு திரும்ப உள்ளார். கைதை தவிர்க்க நம்பத்தகுந்த காரணங்கள் இருந்தால் மட்டுமே லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்க முடியும் என்று வாதிட்டனர். லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜான் சத்யன், சாலைகள் அமைத்தது, அவற்றின் தகுதி சான்றுகள் இல்லாமல் பணிகள் முடிவடையும் முன்பே பணம் விடுவிக்கப்பட்டுள்ளது. ஒரு ஒப்பந்ததாரருக்கு 85 பணிகளுக்கு 195 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது. ஊழல் தடுப்பு சட்டத்தில் சமீபத்தில் கொண்டு வரப்பட்ட திருத்தத்தின்படி வழக்கு தொடர அனுமதியளிக்க தகுதியான அதிகாரி யார் என்பது தெரிவிக்கப்படவில்லை என்றார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கை ரத்து செய்யக் கோரிய மனுவுக்கு ஜூலை 27ம் தேதிக்குள் லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க வேண்டும். அதுவரை கடும் நடவடிக்கைகள் எடுக்க கூடாது. லுக் அவுட் நோட்டீசை எதிர்த்த வழக்கில், ஜூலை 15ம் தேதி லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு மனுதாரர் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் எ.வ.வேலுவுக்கு எதிரான லுக் அவுட் நோட்டீசுக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது என்று உத்தரவிட்டார்.
