ராமநாதபுரம், ஜூலை 9: ராமநாதபுரத்தில் பழமையான ராஜகாளியம்மன் கோயிலை இடிக்க 50க்கும் மேற்பட்ட போலீசாருடன், வருவாய் துறை, நகராட்சி அதிகாரிகள் ஜேசிபி இயந்திரத்துடன் வந்ததால் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ராமநாதபுரம் அரண்மனை அருகே முகவை ஊரணி மேல் கரையில் பழமையான ராஜகாளியம்மன் கோயில் உள்ளது. தனி நபர் ஒருவர், கோயில், நீர் நிலை புறம்போக்கில் இடையூறாக உள்ளது. அதை அகற்றக்கோரி ராமநாதபுரம் நகராட்சி அலுவலகத்தில் புகார் அளித்தார். அதன்படி ஆவணங்களை சரி பார்த்து கோயிலை இடிப்பதற்கு நகராட்சித்துறை, வருவாய் துறையினர் மற்றும் காவல் துறையினர் நேற்று ஜேசிபி இயந்திர வாகனங்களுடன் வந்தனர். அப்போது அங்கு திரண்ட அப்பகுதி பொதுமக்கள் கோயிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
