×

விமான எரிபொருளை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும்: ஏர் இந்தியா, இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட் நிறுவனங்கள் ஒன்றிய அரசுக்கு கோரிக்கை

சென்னை: நாட்டின் முன்னணி விமான நிறுவனங்களான ஏர் இந்தியா, இண்டிகோ மற்றும் ஸ்பைஸ்ஜெட் ஆகியவை, விமான எரிபொருளை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளன. தற்போது விமான எரிபொருளுக்கு வெவ்வேறு மாநிலங்களில் வாட் மற்றும் இதர வரிகள் விதிக்கப்படுவதால் நிறுவனங்களின் செலவு அதிகரித்துள்ளது.

இந்நிலையில், விமான எரிபொருளை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வந்தால், நாடு முழுவதும் ஒரே சீரான வரி விதிப்பு அமலுக்கு வரும் என்றும், நிறுவனங்களின் வரிச் சுமை குறைந்து விமான டிக்கெட் கட்டணங்கள் கணிசமாகக் குறைய வாய்ப்புள்ளதாகவும் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. ஏர் இந்தியா, இண்டிகோ மற்றும் ஸ்பைஸ்ஜெட் அமைப்பான ‘எஃப்ஐஏ’, சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்திற்கு கடிதம் மூலம் இக்கோரிக்கையை வலியுறுத்தியுள்ளது.

தற்போது விமான நிறுவனங்கள் பல சர்வதேச சவால்களையும் எதிர்கொண்டு வருகின்றன. குறிப்பாக, மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம், சில நாடுகளின் வான்வெளியில் விதிக்கப்பட்டுள்ள தடைகள், கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி ஆகியவற்றால் விமானங்களை இயக்குவதற்கான ஒட்டுமொத்த செலவு பல மடங்கு அதிகரித்துள்ளது. எஃப்ஐஏ அமைப்பின் கூற்றுப்படி, முன்பு ஒட்டுமொத்த இயக்கச் செலவில் எரிபொருளின் பங்கு 30 முதல் 40 சதவீதமாக மட்டுமே இருந்தது. ஆனால், தற்போதைய சூழ்நிலையால் அது 55 முதல் 60 சதவீதமாக உயர்ந்துள்ளதால், செலவைச் சமாளிப்பது நிறுவனங்களுக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது.

விமான எரிபொருளை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வர அரசு முடிவு செய்தால், அது விமான நிறுவனங்களின் செயல்பாட்டுச் செலவை பெருமளவு குறைக்கும். இதன் மூலம் மாநிலங்களுக்கு ஏற்ப விதிக்கப்படும் வெவ்வேறு வாட் வரி முறை மாறி, வரி நடைமுறைகள் எளிமையாகும்.

மேலும், விமான நிறுவனங்கள் ‘இன்புட் டேக்ஸ் கிரெடிட்’ பலனையும் பெற முடியும் என்பதால், ஒட்டுமொத்த செலவும் குறைந்து நிறுவனங்கள் டிக்கெட் கட்டணத்தைக் குறைக்க முன்வரும். எனினும், இந்த கோரிக்கை குறித்து ஒன்றிய அரசு இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை என்பதால், அரசின் அடுத்தகட்ட முடிவைப் பொறுத்தே பயணிகளுக்கான கட்டணக் குறைப்பு அமையும்.

Tags : Air India ,Indigo ,SpiceJet ,EU government ,Chennai ,
× RELATED தென்காசி மாவட்டம், புளியறையில் உள்ள...