அகமதாபாத்: கடந்த 2008 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பான வழக்கில் 38 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை குஜராத் உயர்நீதிமன்றம் இன்று உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளது. சிறப்பு நீதிமன்றம் கடந்த 2022 ஆம் ஆண்டு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மேல்முறையீட்டு மனுக்களையும் தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம், விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை முழுமையாக ஏற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ளது.
இந்த வழக்கில் தொடர்புடைய 38 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையையும், 11 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையையும் நீதிமன்றம் உறுதி செய்து இன்று தீர்ப்பு அளித்துள்ளது. குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஏ.ஒய். கோக்ஜே மற்றும் சமீர் தவே அடங்கிய அமர்வு இந்த இறுதித் தீர்ப்பை வழங்கியது. விசாரணை நீதிமன்றத்தின் தண்டனையை ரத்து செய்யக் கோரி இந்தியன் முஜாஹிதீன் அமைப்பை சேர்ந்தவர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களையும் நீதிபதிகள் ஏ.ஒய். கோக்ஜே மற்றும் சமீர் தவே ஆகியோர் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
கடந்த 2008 ஆம் ஆண்டு ஜூலை 26 அன்று, குஜராத்தின் அகமதாபாத் நகரில் 70 நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து 21 இடங்களில் தொடர் குண்டு வெடிப்புகள் நடத்தப்பட்டன. அரசு மருத்துவமனைகள், பேருந்துகள் என பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளை குறி வைத்து நடத்தப்பட்ட இந்த கொடூரத் தாக்குதலில் 56 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 200க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். மேலும் இன்றைய வழக்கு விசாரணையின் போது அரசுத் தரப்பில் ஆஜரான சிறப்பு வழக்கறிஞர் அமித் படேல் குண்டுவெடிப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீட்டு தொகையை அதிகரித்து வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ. 10 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 5 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ. 1 லட்சமும் வழங்க குஜராத் அரசுக்கு உத்தரவிட்டனர். மேலும், இந்த புதிய இழப்பீட்டுத் தொகையை குஜராத் மாநில அரசு வரும் மார்ச் 30, 2027க்குள் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
